நில மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். ஜார்க்கண்ட் முதல்வராக இருந்தவர் ஹேமந்த் சோரன். ஜேஎம்எம் கட்சியின் தலைவரான ஹேமந்த் 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக வாங்கியதாக குற்றம் சாட்டி அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி அவரை கைது செய்தது. அதன் பின்னர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.ஹேமந்த் சோரன் பதவி விலகலை தொடர்ந்து கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வரானார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் ராஞ்சியின், பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து. ஜாமீன் கேட்டு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை கடந்த 28ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ரோங்கன் முகோபாத்யாய, ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சம்பாய் சோரன் வீட்டில் ஜேஎம்எம் மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் ஜேஎம்எம் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக ஹேமந்த் சோரனை தேர்வு செய்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், நேற்று மாலையில் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சம்பாய் சோரன் சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதையடுத்து, உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநரிடம் ஹேமந்த் சோரன் உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க ஆளுநர் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஹேமந்த் சோரனுக்கு முதலமைச்சராக ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்; ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் அவரது தந்தை சிபு சோரன், தாயார் ரூபி சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post நில மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்!! appeared first on Dinakaran.

Related Stories: