தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், மங்கைநல்லூரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “வயிற்று வலியால் அவதிப்பட்ட எனது 12 வயது மகன் கிஷோர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், குடல் வால் அழற்சி ஏற்பட்டு இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் அபினவ் மயக்க மருந்து தந்த பின் என் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிதிசைக்கு பின் அவனை சந்திக்க மருத்துவர்கள் அனுமதி மறுத்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக பின்னர் தெரிவித்தனர்.அறுவை சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட மயக்க மருந்து அதிகமானதன் காரணமாகவே என் மகன் கிஷோர் உயிரிழந்துள்ளார். விசாரணை நடத்தி, மகன் உயிரிழப்புக்கு காரணமாக மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி, அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கதிரவன் ஆஜராகி, அரசியல் செல்வாக்கு இருக்கும் மருத்துவர்கள் மருத்துவமனையில் பணியாற்றுவதால் மருத்துவ நிர்வாகத்தினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மயக்கவியல் மருத்துவர் அபினவ் ஏன் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க சென்றார். அவர் மீது பணி நீக்க நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை? என சரமாரி கேள்விகளை எழுப்பினார். இதற்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மருத்துவ கல்வி இயக்க இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

The post தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: