வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி


வலங்கைமான்: வலங்கைமான் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நாகையை சேர்ந்த 2 வாலிபர்கள் பலியாகினர். நண்பர் படுகாயமடைந்தார். நாகை மாவட்டம் நாகூர் பூதங்குடி கம்பர் தெருவை சேர்ந்த துரைசாமி மகன் சத்யராஜ்(26), சங்கர் மகன் கோபி(31). பூதங்குடி மாதா கோயில் தெருவை சேர்ந்த லோகையன் மகன் மணிகண்டன்(31). நண்பர்களான இவர்கள் 3 பேரும் திருச்சியில் கம்பி பிட்டராக வேலை பார்த்து வந்தனர். பூதங்குடியில் இருந்து திருச்சிக்கு ஒரே பைக்கில் 3 பேரும் நேற்றிரவு சென்றனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த நார்த்தங்குடி புறவழிச்சாலையில் அதிகாலை 2 மணியளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே சத்யராஜ், கோபி ஆகியோர் பலியாகினர். மணிகண்டன் படுகாயமடைந்தார். விபத்து ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

தகவல் அறிந்ததும் வலங்கைமான் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சத்யராஜ், கோபி ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யமடைந்த மணிகண்டனை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

 

The post வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: