ரூ.3 கோடி மதிப்பிலான 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.7.2024) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகளின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஏராளமான உள்ளூர் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் சுற்றுலாத் துறை முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பழம்பெரும் திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக வருகை தரும் வகையில் தமிழ்நாட்டின் நகரங்களை, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுடன் இணைக்கும் வகையிலான இரயில் சேவைகளும், தேசிய, மாநில நெடுஞ்சாலை இணைப்பு வசதிகளும் அதிக அளவில் கொண்ட மாநிலமாகவும், பேருந்து உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்து வசதிகள் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கின்றது.

தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்திட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டு உருவாக்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா பேருந்து சேவைகள், சுற்றுலா பயணத்திட்டங்கள், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், படகு குழாம்கள் போன்ற பல்வேறு சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகின்றது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு-ஒகேனக்கல், மைசூர்-பெங்களுர், குற்றாலம், நவக்கிரக கோவில்கள் தொகுப்பு மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும், சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்- மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, ஶ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும். எட்டு நாட்கள் பயணம் செய்யும் தமிழ்நாடு சுற்றுலா, கோவா-மந்த்ராலயம் சுற்றுலா பயண திட்டங்களும், 14 நாட்கள் பயணம் செய்யும் தென்னிந்திய சுற்றுலா பயண திட்டங்களும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் பொதுமக்களின் வசதிக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுற்றுலா பயண திட்டங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குளிர்சாதன வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பேருந்துகள், அதிநவீன சொகுசு பேருந்துகள், சாதாரண சொகுசு பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சொகுசு பேருந்துகள் என மொத்தம் 15 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த சுற்றுலா பேருந்துகள் மூலமாக 7.5.2021 முதல் 31.5.2024 வரை 3,03,721 நபர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டங்களின் கீழ் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக 3 கோடி ரூபாய் மதிப்பிலான 35 இருக்கைகள் கொண்ட 4 பேருந்துகள் மற்றும் 18 இருக்கைகள் கொண்ட 1 பேருந்து என 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்துகளில் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள குளிர்சாதன வசதி, மிதவை அமைப்பு ( AIR SUSPENSION) வசதி, வாகனத்தின் இருப்பிடத்தை அறிய GPS கருவி, wifi வசதி, ஒவ்வொரு இருக்கையிலும் போன் சார்ஜ் செய்யும் வசதி, 35 பயணிகளும் நீண்ட நாள் பயணத்திற்கான தங்கள் பொருட்களை தாராளமாக வைத்துக் கொள்ள மிகப்பெரிய அளவிலான பொருட்கள் வைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

The post ரூ.3 கோடி மதிப்பிலான 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.

Related Stories: