முன்னாள் காதலியிடம் பேசியதால் ஆத்திரம் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை : பாஜ மாநில துணை தலைவர் மகன் கைது

துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் முன்னாள் காதலியிடம் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தன்னுடன் பணியாற்றி வந்த வெப்சைட் நிறுவன ஊழியரை அடித்துக்கொன்ற பாஜ மாநில துணை தலைவர் மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை துரைப்பாக்கம் கஸ்டம்ஸ் காலனி பிரதான சாலையில் தனியார் வெப்சைட் நிறுவனம் இயங்கி வருகிறது. கடந்த 2 வருடங்களாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த தரணிதரன் (34), சென்னை திருவான்மியூர், லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் (34) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இதில் தரணிதரன் டெவலப்மென்ட் மேனேஜராகவும், ஹரிஹரன் நிதிப்பிரிவிலும் பணியாற்றி வந்துள்ளனர். நேற்று முன்தினம் அந்நிறுவனம் அரைநாள் மட்டுமே இயங்கியது. அப்போது அங்கு தரணிதரன் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவரும் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் தரணிதரன் மாலையில் நிறுவன உரிமையாளர் மீராவை, தொலைபேசியில் தொடர்புகொண்டு, எனக்கும் ஹரிஹரனுக்கும் சண்டை ஏற்பட்டது.

இதில் கீழே விழுந்த அவர் மீண்டும் எழவில்லை என்று கூறியுள்ளார். உடனே நிறுவன உரிமையாளர் மீரா, துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று தகவலை தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அங்கு வந்து பரிசோதித்ததில் சம்பவ இடத்திலேயே ஹரிஹரன் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் துரைப்பாக்கம் போலீசார், ஹரிஹரன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கொலை செய்த தரணிதரனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். ஒரே நிறுவனத்தில் கடந்த 2 வருடங்களாக பணிபுரிந்து வந்த தரணிதரணின் முன்னாள் காதலியிடம், ஹரிஹரன் செல்போனில் பேசி வந்துள்ளார். இதுகுறித்து தரணிதரன் கேட்டபோது, நான்தான் தற்போது அப்பெண்ணை காதலிக்கிறேன், என ஹரிஹரன் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தரணிதரன், நிறுவனத்தில் இருந்து துரைப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் சென்று மது அருந்திவிட்டு, மீண்டும் நிறுவனத்திற்கு வந்து ஹரிஹரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஹரிஹரனும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் மது போதையில் இருந்தநிலையில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

ஒருகட்டத்தில் ஹரிஹரனை தாக்கி கீழே தள்ளி, அவரது நெஞ்சு மற்றும் வயிற்றில் தரணிதரன் பலமாக அடித்துள்ளார். அதில் நிலை குழைந்த ஹரிஹரன் நிறுவனத்தின் முன்பாக உள்ள சாலையில் சரிந்து விழுந்துள்ளார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் எழுந்து வராததால் பயத்தில் நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டு தரணிதரன் சம்பவம் குறித்து கூறியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

தரணிதரனின் தந்தை ஆரோக்கியசாமி புதுச்சேரி மாநில பாஜ துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் காதலியுடன் பேசிய தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post முன்னாள் காதலியிடம் பேசியதால் ஆத்திரம் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை : பாஜ மாநில துணை தலைவர் மகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: