மோடி அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாளை அமல்: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் ஏற்பாடுகள் தயார்

புதுடெல்லி: எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் நாளை 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வருகிறது.  இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், கடந்தாண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு ஒன்றிய அரசின் அரசிதழில் கடந்த டிசம்பரில் வெளியானது. இந்நிலையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களும் நாளை (திங்கள்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றன. புதிய குற்றவியல் சட்டங்களின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், நாட்டிலுள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகளைப் பதிவு செய்யும் தற்போதைய குற்றவியல் கண்காணிப்பு அமைப்புகளின் (சிசிடிஎன்எஸ்) பயன்பாட்டில் 23 செயல்பாட்டு புதுப்பிப்புகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய வழிமுறைகளுக்கு தடையின்றி மாறுவதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவியையும் என்சிஆர்பி வழங்கியுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5,65,746 காவலர்கள், சிறை, தடயவியல், நீதித் துறை அதிகாரிகள் உள்பட 5,84,174 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மூலம் 40 லட்சம் தன்னார்வலர்களுக்கு, 3 புதிய சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டங்களின்கீழ் மின்னணு முறையில் சம்மன் நோட்டீஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக, இ-சாக்ஷியா, நியாயஷ்ருதி, இ-சம்மன் ஆகிய 3 செயலிகளை தேசிய தகவல் மையம் (என்ஐசி) உருவாக்கியுள்ளது. நாளை 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கான வேலைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் 3 புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக கூறி எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா ஆகியோர் இந்த சட்டங்களை அவசரகதியில் அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நிலுகையில் உள்ளது. பல மாநிலங்களில் வழக்கறிஞர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் புதிய சட்டங்களை நாளை முதல் மோடிதலைமையிலான பா.ஜ அரசு அமல்படுத்த உள்ளது.

* 90 நாட்களுக்குள் பதில்
மபி மாநிலம் குவாலியர் மாவட்ட போலீஸ் எஸ்பி தர்மவீர் சிங் கூறுகையில், ‘மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் தங்களது வீட்டில் இருந்து கொண்டே இ-எப்ஐஆர் மூலம் புகாரை பதிவு செய்யலாம்.

குறிப்பிட்ட காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது என்றில்லாமல், எங்கிருந்தும் எந்த மாநிலத்திலும் புகார் அளிக்கலாம். ஜீரோ எப்ஐஆர் முறையில் புகாரை அளிக்கலாம். டிஜிட்டல் முறையில் புகாரில் தெரிவிக்க முடியும். விசாரணைக்கான கால அவகாசம் குறிப்பிடப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சாதாரண குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வழிவகுக்கும். புதிய சட்டத்தின்படி 90 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர் அல்லது புகார்தாரருக்கு வழக்கின் முன்னேற்றம் குறித்து விசாரணை அதிகாரி தெரிவிப்பார்’ என்றார்.

The post மோடி அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாளை அமல்: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நாடு முழுவதும் ஏற்பாடுகள் தயார் appeared first on Dinakaran.

Related Stories: