விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. திமுக, பாமக உள்ளிட்ட 29 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தொகுதிக்குட்பட்ட அய்யூர்அகரம் பகுதியில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தேவையான வாக்காளர் தகவல் சீட்டினை (பூத் சிலிப்) மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி நேரில் சென்று வழங்கினார்.

தொடர்ந்து பூத் சிலிப் வழங்கும் பணியை ஆய்வு செய்த பின் கலெக்டர் கூறியதாவது: வருகிற 10ம்தேதி நடைபெறும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 21ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 திருநங்கைகள் என மொத்தம் 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

தற்போது வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தேவையான வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வாக்காளரின் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கும்பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாக்காளர் தகவல்சீட்டு வழங்கும் பணியானது வரும் ஜூலை 4ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் இல்லங்களுக்கே சென்று அளித்திடவும் குறிப்பிட்ட நாளுக்குள் வழங்கிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
இடைத்தேர்தலில் இந்த தொகுதிக்குட்பட்ட 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாக்குகளை வீட்டிலிருந்தவாறே அஞ்சல் வாக்குசீட்டின் மூலம் செலுத்திடும் வகையில் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகளை சேகரிக்க நடமாடும் அஞ்சல் வாக்குசீட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்காளர்களிடம் விருப்பமனு பெறப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஜூலை 1, 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய நாட்களில் அஞ்சல் வாக்குச்சீட்டினை நேரில் அளித்து இந்த வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் அஞ்சல் வாக்குசீட்டுகளை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: