மஞ்சூர் அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

மஞ்சூர், ஜூன் 26: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மஞ்சூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமை தாங்கினார். எஸ்.ஐ சுரேஷ்குமார், தலைமையாசிரியர் பவுல்ராஜ், என்சிசி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் துவங்கி மஞ்சூர் பஜார் வரை சென்ற பேரணியில் மாணவ, மாணவிகள் மற்றும் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மாணவர்கள் மத்தியில் பேசும்போது, பெரும்பாலும் போதைக்கு அடிமையானவர்கள் திருட்டு, கொள்ளை, அடிதடி, கொலை, பாலியல் தொந்தரவுகளில் மட்டுமின்றி தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகை போதைப்பொருட்களால் அதை பயன்படுத்துவோர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கலாச்சார சீரழிவுகளுக்கும் போதைப்பழக்கம் காரணமாகிறது. அரசின் வழிகாட்டுதல்படி போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. போதைப்பொருட்கள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவ, மாணவிகள் முன்வர வேண்டும் என்றார் இதைத்தொடர்ந்து, மஞ்சூர் மகாகவி பாரதியார் நினைவு நுாற்றாண்டு அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவிகள் இடையே போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

The post மஞ்சூர் அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: