மது அருந்தியது, கஞ்சா புகைத்தது, சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை: 3 பேர் கைது; திருவான்மியூரில் பயங்கரம்

துரைப்பாக்கம்: மது அருந்தியது, கஞ்சா புகைத்தது, சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருவான்மியூரில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (40) கார்பென்டர். இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர். மாமியார் பொன்னி (58) வீட்டில்தான் ஐயப்பன் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்றதால், வேறு வழியின்றி வயதான மாமியாரையும் கவனித்து கொண்டு அங்கேயே ஐயப்பன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல ஐயப்பன் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தார். மாமியார் பொன்னி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். உடனே ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தார். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பொன்னி இறந்து விட்டார்.

தகவலறிந்து திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். ஐயப்பனிடம் விசாரித்த போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் அருள்மணி (19) என்பவர்தான் அடிக்கடி மாமியாரிடம் சண்டை போடுவதாக கூறியுள்ளார். அதனால் அவரை தேடி போலீசார் வீட்டுக்கு சென்றனர். அவர் எதுவுமே தெரியாதது போன்று இருந்தார். இதையடுத்து கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். இதில் தெரியவந்த திடுக் தகவல்கள் வருமாறு:

அருள்மணி, தனியார் நிறுவனத்தில் பொருட்கள் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது பெற்றோர் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில்தான் வீடு திரும்புவார்கள். தங்கை, பள்ளியில் படித்து வருகிறார். அருள்மணி, வேலைக்கு சென்றால் மதியம் வீட்டுக்கு வந்து விடுவார். பின்னர் நண்பர்களை வரவழைத்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது, பெண்களை அழைத்து வந்து ஜாலியாக அரட்டை அடிப்பது, வீட்டின் வெளியே பொது வெளியில் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை பக்கத்து வீட்டில் வசித்து வரும் பொன்னி கடுமையாக கண்டித்துள்ளார்.

மேலும் அவரது பெற்றோரிடமும் கூறியுள்ளார். இதனால் அருள்மணி விரக்தியில் இருந்தார். நேற்று காலையில் வழக்கம் போல பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். தங்கை, அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். அருள்மணியும் வேலைக்கு சென்று விட்டு மதியம் நண்பர்களுடன் மது அருந்தி கஞ்சா புகைத்துள்ளார். இதை பொன்னி கண்டித்துள்ளார். தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அருள்மனி உள்ளிட்ட அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து பொன்னியின் வீட்டுக்குள் சென்று காய்கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அருள்மணி மற்றும் நண்பர்களான தினகரன் (21), விக்னேஷ் (20) ஆகியோரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post மது அருந்தியது, கஞ்சா புகைத்தது, சிறுநீர் கழித்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம் மூதாட்டி கழுத்து அறுத்து படுகொலை: 3 பேர் கைது; திருவான்மியூரில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: