நகைக்கடை சுவரை துளையிட்டு கொள்ளை லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுனுக்கும் ேமல் நகை தப்பியது: தாம்பரத்தில் பரபரப்பு : மர்ம நபர்களுக்கு வலை

தாம்பரம்: தாம்பரத்தில் நகைக்கடை சுவரை துளையிட்டு மர்ம நபர்கள், நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுனுக்கும் மேல் நகைகள் தப்பியது. மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவர், தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலை, கேம்ப் ரோடு சந்திப்பு அருகே பரிஷ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார்.

இங்கு 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக்கமாக காலை 9 மணியளவில் கடை திறக்கப்பட்டு இரவு 9 மணியளவில் பூட்டப்படும். சிறிய கடை என்பதால் காவலாளி என எவரும் நியமிக்கப்படவில்லை. நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். இன்று அட்சய திருதியை என்பதால் வழக்கத்துக்கு மாறாக காலை 8 மணிக்கே கடையை திறக்க மனோஜ் வந்தார். ஊழியர்களும் வந்து விட்டனர். கடையை திறந்து உள்ளே சென்றனர். வெள்ளி பொருட்கள் மற்றும் நகைகள் சிதறி கிடந்தது. அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

கடையில் இருந்த வெள்ளி நகைகள் மற்றும் தங்க நகைகளை சரிபார்த்தனர். மற்றொரு அறைக்கு சென்று பார்த்தபோது, சுவர் துளையிடப்பட்டிருந்தது. அவ்வழியாக மர்ம நபர்கள் நுழைந்து, தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உடனே இதுகுறித்து சேலையூர் போலீசில் மனோஜ் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. கடையில் இருந்த லாக்கரை பல மணி நேரம் போராடி உடைக்க கொள்ளையர்கள் முற்பட்டனர்.

முடியாததால் 100 பவுனுக்கும் மேலான நகைகள் தப்பியதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் கடையின் ஷோகேஸில் இருந்த 10 பவுன் நகை மற்றும் சுமார் 20 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. நள்ளிரவில் மர்ம நபர்கள், கடையின் பின்புற சுவரை கடப்பாரையால் துளையிட்டு உள்ளே நுழைந்து நகைகளை திருடி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் எவ்வளவு தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது என்பது பற்றி முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post நகைக்கடை சுவரை துளையிட்டு கொள்ளை லாக்கரை உடைக்க முடியாததால் 100 பவுனுக்கும் ேமல் நகை தப்பியது: தாம்பரத்தில் பரபரப்பு : மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: