தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு திருவாரூர் பாஜ நிர்வாகி, ரவுடி கைது: மேலும் இருவருக்கு வலை

திருவாரூர்: தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் ஏற்பட்ட மோதலில் பாஜ பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக பாஜ நிர்வாகி மற்றும் ரவுடி கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா காவனூரை சேர்ந்தவர் மது (எ) மதுசூதனன்(40). அடவங்குடியில் மெடிக்கல் ஷாப், ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். பாஜ விவசாய அணி மாவட்ட பொது செயலாளராக பதவி வகித்த இவருக்கும், மாவட்ட பாஜ தலைவராக உள்ள பாஸ்கருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2 ஆண்டுகளுக்கு முன் மதுசூதனன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.

இவர் தான், தஞ்சையில் போட்டியிட்ட கருப்பு முருகானந்தம் மற்றும் நாகை தொகுதி பாஜ வேட்பாளரின் பண விநியோகத்தை கவனித்து வந்தாராம். இவர் நிர்வாகிகளிடம் பணத்தை கொடுக்காமல் முறைப்படி செலவு செய்ததால் கட்சியில் உள்ள சில நிர்வாகிகள் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு குடவாசல் ஓகை பாலம் அருகே உள்ள கடை ஒன்றில் மதுசூதனன் நின்றபோது 2 பைக்குகளில் வந்த 4 பேர் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் படுகாயமடைந்த மதுசூதனன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து குடவாசல் போலீசில் மதுசூதனன் மனைவி ஹரிணி நேற்று புகார் செய்தார். அதில், பாஜ மாவட்ட தலைவர் பாஸ்கரின் நெருக்கடி காரணமாக தான் தனது பதவியை கணவர் மதுசூதனன் ராஜினாமா செய்தார். தற்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டப்பட்டுள்ளார். இதற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் செந்திலரசன் தான் பொறுப்பு. பாஸ்கர் உத்தரவின்பேரிலும், செந்திலரசன் தூண்டுதலின்பேரிலும் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில் பாஸ்கர், செந்திலரசன் மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் உட்பட 6 பேர் மீது கொலை முயற்சி, கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை பார்வையிட்டனர். அப்போது சம்பவ இடத்தில் மாவட்ட பாஜ விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அணி பொறுப்பாளராக உள்ள காட்டூரை சேர்ந்த ஜெகதீசன்(30), தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ரவுடி சரவணன்(30) ஆகியோர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீசன், சரவணன் ஆகியோரை நேற்றிரவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

The post தேர்தல் பணம் விநியோகம் செய்ததில் மோதல் கட்சி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு திருவாரூர் பாஜ நிர்வாகி, ரவுடி கைது: மேலும் இருவருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: