தோல்வியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அம்பானி, அதானியிடம் மன்றாடுகிறார் மோடி : உ.பி.யில் ராகுல், அகிலேஷ் கூட்டாக பிரச்சாரம்

லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் பாஜக – I.N.D.I.A. கூட்டணி பலத்த போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கூட்டாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், “10 ஆண்டுகளாக போலி வாக்குறுதிகள் அளித்து மக்களை பா.ஜ.க. தவறாக வழி நடத்தி வந்துள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து பா.ஜ.க.வுக்கு தக்க பாடம் புகட்டும். விவசாயிகள், இளைஞர்கள், நாட்டு மக்கள் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “நான் எழுதித் தருகிறேன்; உத்தரபிரதேசத்தில் பாஜக கூட்டணி படுதோல்வி அடையும். நாடு முழுவதும் பாஜகவின் தோல்விக்கு உத்தரபிரதேசம் தான்வழிகாட்டப் போகிறது. உத்தரபிரதேசத்தில் I.N.D.I.A. கூட்டணி மற்றும் அகிலேஷ்யாதவுக்குதான் வெற்றி: தோல்வியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அம்பானி, அதானியிடம் மன்றாடுகிறார் மோடி. 10 ஆண்டுகளில் பல்வேறு மேடைகளில் பேசிய மோடி ,அம்பானி,அதானி பெயரை குறிப்பிடவில்லை. பயம் வரும்போது தன்னை யார் காப்பாற்றுவார்களோ அவர்களைப் பற்றி பேசுகிறார் மோடி. அதானி பணத்தை டெம்போவில் அனுப்புவதாக தனது சொந்த அனுபவத்தில் மோடி கூறுகிறார். 15 நாட்களுக்கு உங்கள் கவனத்தை திசைதிருப்ப மோடி, அமித்ஷா முயற்சிப்பார்கள்; உஷாராக இருங்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post தோல்வியில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அம்பானி, அதானியிடம் மன்றாடுகிறார் மோடி : உ.பி.யில் ராகுல், அகிலேஷ் கூட்டாக பிரச்சாரம் appeared first on Dinakaran.

Related Stories: