ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு பள்ளி, கல்லூரி வாகனங்களில் கேமராக்கள், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்

*ஆர்டிஓ உத்தரவு

ஆரணி : ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட ஆரணி, போளூர், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றிச்செலும் பஸ்கள், வேன் உள்ளிட்ட வாகனங்களின் பாதுகாப்பு உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யும் பணிகள் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். டிஎஸ்பி ரவிச்சந்திரன், தீயணைப்பு துறை நிலை அலுவலர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் வரவேற்றார். இதில், ஆர்டிஓ பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் பஸ், வேன்களை ஆய்வு செய்தார். அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 50 தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து ஆய்விற்காக வந்த 335 பள்ளி பஸ்கள், வேன்கள் கொண்டு வரப்பட்டது.

அப்போது, பேருந்துகளில் மஞ்சள் கலர், ஒளிரும் ஸ்டிக்கர், மாணவர்களுக்கு வசதியான படிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா?, முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் உள்ளனவா என விதிமுறைகள் குறித்து அனைத்து பஸ்களையும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து, குறைபாடுகளை சுட்டிகாட்டி, குறைகளை சரிசெய்ய உத்தரவிட்டார். மேலும், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தபோது, பஸ்களில் அனுபவமுள்ள டிரைவர்களை வரவழைத்து. அவர்களின் அனுபவம், வயது, ஓட்டுனர் உரிமம் உள்ளதா என கேட்டறிந்தார்.

அப்போது, 5 பஸ்களில் பாதுகாப்பு உறுதித்தன்மை மற்றும் குறைபாடுகள் அதிகமுள்ளதை சுட்டிகாட்டி, மீண்டும் பஸ்சில் குறைகளை முழுமையாக சரிசெய்த பின்னரே, ஆய்விற்கு கொண்டுவருமாறு ஆர்டிஓ உத்தரவிட்டார். தொடர்ந்து, பள்ளி பஸ்கள் மற்றும் வேன்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தனியார் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு தீயணைப்பு நிலை அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் பஸ், வேன்களில் தீ விபத்துகள் ஏற்பட்டால் தீயை அணைப்பது, தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், கல்வித்துறை, போக்குவரத்து, வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனியானர் பள்ளி ஓட்டுனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு பள்ளி, கல்லூரி வாகனங்களில் கேமராக்கள், வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: