லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார ஆய்வாளர், லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கன்னியாகுமரி மாவட்டம், கொல்லம்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் ராகவன்நாயர்(45). இவர், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி சென்னம்மாள்(32). திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் மகனும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். திருவண்ணாமலை அடுத்த வடஅரசம்பட்டு கிராமத்தில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ராகவன் நாயருக்கு உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 7ம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்தவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய ராகவன் நாயர், மருத்துவமனை எதிரில் உள்ள பை பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியின் குறுக்கே திடீரென பாய்ந்தார். அதில், லாரியின் பின்பக்க டயரில் சிக்கி உடல் நசுங்கியது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நோய் கொடுமை தாங்காமல் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு என்ன காரணம் என விசாரித்து வருகின்றனர்.

The post லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: