போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ் குறித்து அவதூறு கருத்து பரப்பிய யுடியூபர் சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை: ஏற்கனவே காயம் இருப்பதாக கூறியுள்ளார்; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுடியூபர் சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போதே தனக்கு காயம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் சிறையில் தாக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெண் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யுடியூபர் சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது கை உடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவரை சிறைத்துறையினர் துன்புறுத்தியுள்ளதால், அதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், உரிய சிகிச்சை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், தேனியில் கைது செய்யப்பட்ட சங்கரை, கோவை அழைத்து வந்தபோது, தாராபுரம் அருகே விபத்து ஏற்பட்டது. அதில் அவரும் போலீசாரும் காயமடைந்தனர். சங்கரின் இடது கை, வலது கால்பாதம், உதடு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டார். சிறை மருத்துவரும் அவரை பரிசோதித்து சான்றளித்துள்ளார்.

அதுசம்பந்தமான அறிக்கையில் சங்கர் கையெழுத்திட்டு, கைரேகை பதிவு செய்துள்ளார். சிறைத்துறையினர் தாக்கியதாக குற்றம் சாட்டி கோவை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சங்கர் தாக்கல் செய்த மனு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சட்டப் பணிகள் ஆணைக் குழு நியமித்த மூன்று வழக்கறிஞர்கள் மற்றும் ஒரு எலும்பு சிகிச்சை நிபுணர் அடங்கிய குழு, ஒரு மணி நேரத்துக்கும் மேல் சங்கரிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது என்றார். இதையடுத்து, அந்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், நீதிமன்ற விசாரணை குழுவின் அறிக்கையை தாக்கல் செய்து வாதிடும்போது, முதலில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே தனக்கு காயம் உள்ளது என்பதை சங்கர் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் சிறையில் தாக்கப்படவில்லை. கோவை நீதிமன்றத்தின் உத்தரவின்படி அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார். அப்போது, சங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், சிறையில் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே அவரை வேறு சிறைக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சட்டப் பணிகள் ஆணைக்குழு நியமித்த நீதிமன்ற குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கோவை நீதிமன்றம் அவருக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது. அதன்படி அவருக்கு தற்போது கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை தரப்படுகிறது. அவரை வேறு சிறைக்கு மாற்ற கோரினால் சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரியிடம் மனு கொடுங்கள். அதை சிறைத்துறை 2 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தருவது பற்றி உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. நீதித்துறை விசாரணை முடிந்துவிட்டதால் இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ் குறித்து அவதூறு கருத்து பரப்பிய யுடியூபர் சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை: ஏற்கனவே காயம் இருப்பதாக கூறியுள்ளார்; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: