இ பாஸ் நடைமுறையால் களையிழந்த சீசன்; ஊட்டி, கொடைக்கானலுக்கு பயணிகள் வருகை குறைந்தது: வியாபாரிகள், லாட்ஜ் உரிமையாளர்கள் வேதனை

ஊட்டி: இ பாஸ் நடைமுறை காரணமாக ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை பாதியாக குறைந்து விட்டது. இதனால் வியாபாரிகள், லாட்ஜ் உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முக்கிய கோடைவாசஸ்தலங்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல். இந்த இடங்களுக்கு கோடை சீசனின் போது நாள்தோறும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கூட்டம் அதிகரித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு, இ- பாஸ் முறை அறிமுகப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி 2 இடங்களிலும் இ பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது.

கடந்த 7ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருவதற்கு இ-பாஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டது. இ- பாஸ் அறிமுகம் செய்யப்பட்டு சோதனை சாவடிகளில் வாகனங்கள் இ-பாஸ் பெறப்பட்டுள்ளதா என சோதனையிட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. கடந்த 1ம் தேதி முதல் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.

ஆனால், இ- பாஸ் அறிமுகம் 7ம் தேதி 11 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். நேற்று மீண்டும் குறைந்து பத்தாயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்தனர். இவர்களில் ஒரு சிலர் கடந்த 7ம் தேதிக்கு முன்னரே ஊட்டிக்கு வந்தவர்கள். பொதுவாக மலர் கண்காட்சி நடக்கும் நாட்கள் அதற்கு முன்னர் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். நாள் ஒன்றுக்கு முப்பதாயிரம் முதல் 50 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதன் மூலம் ஊட்டியில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் வியாபாரம் நடக்கும். லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழியும்.

ஆனால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்து உள்ளதால் வியாபாரிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் மற்றும் லாட்ஜ் காட்டேஜ் உரிமையாளர்கள் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
அதேபோல் கொடைக்கானலிலும் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சோதனைச்சாவடி அமைத்து இ-பாஸ் பெற்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 72 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், மே மாதத்தில் 1 லட்சத்து 85 ஆயிரம் பேரும் வந்திருந்தனர். அதே சமயம் இந்தாண்டு ஆண்டு ஏப்ரலில் 73 ஆயிரம் பேரும், இந்த மாதத்தில் நேற்று வரை 27 ஆயிரம் பேர் மட்டுமே வந்துள்ளனர். கொடைக்கானலுக்கு வழக்கமாக நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இது விடுமுறை நாட்களில் அதிகரிக்கும். இ.பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகள் வருகை பாதியாக குறைந்துள்ளது. இதனால், கேரள மாநிலத்திலுள்ள சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்துள்ளனர்.

The post இ பாஸ் நடைமுறையால் களையிழந்த சீசன்; ஊட்டி, கொடைக்கானலுக்கு பயணிகள் வருகை குறைந்தது: வியாபாரிகள், லாட்ஜ் உரிமையாளர்கள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: