வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்தர ஆணை!!

சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்தர ஆணையிடப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இந்த தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “சென்னையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தடை என பிறப்பித்த உத்தரவில் பல்வேறு குழப்பங்கள் உள்ளது.இந்த உத்தரவு சென்னைக்குள் மட்டும் பொருந்துமா? அல்லது மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்துமா? என விளக்கப்படவில்லை. கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படவில்லை. வாகனங்களின் முன்பக்கம், பின்பிக்கம் இருக்கும் கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஸ்டிக்கர்களாக ஒட்ட தடை விதிக்க வேண்டும்.பேருந்துகளின் பின்புறம் மற்றும் இருபுறங்களில் வணிக விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும்,”எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று (மே 09) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் மற்றும் கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனு மீதான விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்தர ஆணை!! appeared first on Dinakaran.

Related Stories: