விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து; 25 ஊழியர்கள் பணிநீக்கம்.! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடி

சென்னை: இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம் கடந்த 2022-ம் ஆண்டு ஏர் இந்தியா மற்றும் அதன் அங்கமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை வாங்கியது. இதுதவிர, ஏஐஎக்ஸ் கனெக்ட் மற்றும் விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்களும் டாடா குழுமம் வசம் உள்ளன. இந்நிலையில், ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைத்து ஒரு நிறுவனமாகவும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏஐஎக்ஸ் கனெக்ட் நிறுவனத்தை இணைத்து ஒரு நிறுவனமாகவும் மாற்றும் நடவடிக்கையை டாடா குழுமம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், ஊழியர்கள் சமத்துவமாக நடத்தப்படுவது இல்லை என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நிர்வாகத்திடம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விமான ஊழியர்கள் ஒரே நேரத்தில், தங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் தெரிவித்துவிட்டு விடுப்பு எடுத்தனர். தங்கள் செல்போன்களையும் சுவிட்ச் ஆஃப் செய்தனர். விமானத்தை இயக்க ஊழியர்கள் இல்லாத நிலையில் கடந்த 7-ம் தேதி இரவு முதல் 80-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் விமான பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். கடைசி நேரத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையங்களில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா, திருவனந்தபுரம், சிங்கப்பூர் உள்பட 8 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எந்த முன்னறிவிப்பும் இன்றி சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது ஊழியர்களில் சுமார் 25 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக வேலைக்கு வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விடுப்பு எடுத்த ஊழியர்களின் நடத்தை காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து; 25 ஊழியர்கள் பணிநீக்கம்.! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: