பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு; பிரதமர் மீது நடவடிக்கை கோரிய மனுவை விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் முறையீடு


சென்னை: தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரிய மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் முறையிடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.செல்வப்பெருந்தகை தாக்கல் செய்த மனுவில், தேர்தல் பிரசாரத்தின்போது இரு மதத்தினருக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பிரதமர் மோடி பேசி வருகிறார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, எனது புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதையடுத்து, நேற்று காலை விடுமுறைகால நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா, கலைமதி ஆகியோர் முன்பு காங்கிரஸ் வழக்கறிஞர்கள் ஏ.பி.சூரியபிரகாசம், விக்டர் ஆகியோர் ஆஜராகி, எங்கள் மனுவை பட்டியலிட மறுக்கிறார்கள். பிரதமர் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வருகிறார். இது தொடர்பாக எங்கள் புகாரை பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரியுள்ளோம். பிரதமர் பெயரை மனுவில் சேர்த்துள்ளதால் பட்டியலில் சேர்க்க மறுக்கிறார்கள். எனவே, எங்கள் மனுவுக்கு எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிடுமாறு பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டனர்.
இதைக்கேட்ட நீதிபதிகள், மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தாக்கல் செய்யுங்கள் என்று அறிவுறுத்தினர்.

The post பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு; பிரதமர் மீது நடவடிக்கை கோரிய மனுவை விசாரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: