ஜெயக்குமார் மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்?…சந்தேகங்களை எழுப்பும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள்..!!

சென்னை: ஜெயக்குமாரின் மரண வாக்குமூல பாணி கடிதங்களை அவரே எழுதினாரா? விசாரணையை திசை திருப்பும் முயற்சியாக எழுதப்பட்டதா? என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடிதத்தில் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 5-வது நாளாக போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 9 தனிப்படைகளை அமைத்து பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலும் முக்கிய தடயங்கள் சிக்குமா? என போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஜெயக்குமார் மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்? என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். ஜெயக்குமார் எழுதியதாக இரண்டு கடிதங்கள் வெளியானது. முதல் கடிதம் போலீஸுக்கும் இரண்டாவது கடிதம் அவரது மருமகளுக்கும் எழுதப்பட்டிருந்தது. 2 கடிதங்களிலும் யாருக்கு பணம் கொடுத்தார் அதை எப்படி வாங்க வேண்டும் என்பது பற்றி ஜெயக்குமார் விரிவாக எழுதியிருந்தார். அதில் ரூபி மனோகரன், தங்கபாலு, பள்ளி தாளாளர் ஒருவர், ஒரு பெண் உட்பட 9 பேரின் பெயர் குறிப்பிட்டு கடிதம் எழுதப்பட்டிருந்தது. ஜெயக்குமாரின் மரண வாக்குமூல பாணி கடிதங்களை அவரே எழுதினாரா? விசாரணையை திசை திருப்பும் முயற்சியாக எழுதப்பட்டதா? என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடிதம் எழுதியது ஜெயக்குமார்தான் என காவல்துறையிடம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், உதவியாளர் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து ஜெயக்குமார் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்ததாகவும் விசாரணை வளையத்துக்குள் வந்த அனைவரும் தகவல் தெரிவித்துள்ளனர். மரண வழக்கில் உண்மை தன்மையை நிரூபிக்க தங்கபாலு மற்றும் ரூபி மனோகரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஜெயக்குமார் மரண வாக்குமூல கடிதம் எழுதியது யார்?…சந்தேகங்களை எழுப்பும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: