செய்யாறு அருகே சிறுங்கட்டூர் சத்யா நகரில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

*ஆற்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

செய்யாறு : செய்யாறு அருகே சிறுங்கட்டூர் சத்யா நகரில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆற்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சிறுங்கட்டூர் கிராமத்தின் விரிவு பகுதியான சத்யா நகர் பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கும் எடுக்க வில்லையாம்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 7.15 மணியளவில் ஆற்காடு சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் கிராம மக்கள் கட்டில் போட்டு, மரக்கிளைகளை வெட்டி உடைத்து போட்டு காலி குடங்களுடன் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மோரணம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் மற்றும் போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் தீபா ராபர்ட் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

குடிநீர் உடனடியாக விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியலால் செய்யாறு ஆற்காடு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

The post செய்யாறு அருகே சிறுங்கட்டூர் சத்யா நகரில் குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: