தீவன தட்டுப்பாட்டால் புதன்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

*விலை சரிவு; ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்

சேந்தமங்கலம் : கோடை வெயில் வறட்சி காரணமாக தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று புதன்சந்தையில் விற்பனைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது.

திங்கட்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் வரை சந்தை நடைபெறும். சந்தையில் மாடுகளை வாங்க விற்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் வருகிறார்கள்.

கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். நேற்று கூடிய சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் வறட்சி காரணமாக தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் அதிக அளவில் மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. கடல் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் என்பதால் இறைச்சி மாடுகளின் தேவை அதிகரித்துள்ளது.

எனவே மாடுகளை வாங்க வெளி மாநில, மாவட்ட வியாபாரிகள் நேற்று அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் மாடுகளின் விலை குறைந்தது. இறைச்சி மாடுகள் ரூ.27 ஆயிரத்திற்கும், கறவை மாடுகள் ரூ.46 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனையானது. ஒட்டு மொத்தமாக நேற்றைய சந்தையில் ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post தீவன தட்டுப்பாட்டால் புதன்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: