மக்களை ஏமாற்றுகிறார் சந்திரபாபு; முதல்வர் ஜெகன்மோகன் தாக்கு

திருமலை: ஆந்திராவில் மக்களவை, சட்டமன்ற தேர்தல் வரும் 13ம்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாபட்லா மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ரேபள்ளேயில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நேற்று ரோட்ஷோ நடந்தது. இதில் முதல்வர் ஜெகன்மோகன் பேசியதாவது:அடுத்த வாரம் நடைபெற உள்ள தேர்தல் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமே அல்ல. உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தீர்மானிக்கும் தேர்தல். ஜெகனுக்கு வாக்களித்தால் தற்போதைய திட்டங்கள் தொடரும், சந்திரபாபுவுக்கு வாக்களித்தால் அத்திட்டங்கள் முடிவுக்கு வரும்.

சந்திரபாபுவை நம்புவது மலைப்பாம்பு வாயில் தலை வைப்பது போன்றது. சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுகிறார்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். 2.31 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். ஏழைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஆரோக்கிய காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சந்திரபாபு ஆட்சிக்கு வந்தால் நிலைமை என்னவாகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மசூலிப்பட்டணத்தில் நேற்றிரவு ஜெகன்மோகன் பேசியதாவது: இம்முறை தேர்தல் அமைதியான முறையில் நடக்குமா? என்பது தெரியவில்லை. குறிப்பாக நேர்மையான அதிகாரிகளை கூட மாற்றி வருகின்றனர். நமக்கு எதிராக களம் காணும் கூட்டணி கட்சிகள் (தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக) வெற்றிபெற இதுபோன்று அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள்தான் விழிப்புடன் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரசை மீண்டும் வெற்றிபெறச்செய்து ஆட்சியில் அமர வைக்கவேண்டும் என்றார்.

The post மக்களை ஏமாற்றுகிறார் சந்திரபாபு; முதல்வர் ஜெகன்மோகன் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: