ஊட்டி மலர் கண்காட்சிக்கு அலங்கார பணிகள் துவக்கம்

*ரோஜாக்களால் டிஸ்னி வோர்ல்டு அலங்காரம்

ஊட்டி : மலர் கண்காட்சி 10ம் தேதி துவங்கும் நிலையில், பிரமாண்ட டிஸ்னி வோர்ல்டு, ஆக்டோபஸ், காளான் மற்றும் பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்வதற்கான பணி துவக்கப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 10ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை 11 நாட்கள் 126வது மலர் காட்சி நடக்கிறது. மலர் காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

இன்கா மேரி கோல்டு,பிரஞ்ச் மேரி ல்டு,பிளாக்ஸ்,பெட்டூனியா,பேன்சி,டயான்தஸ்,பிகோனியா, டேலியா,பால்சம்,ரெனன்குலஸ்,வயோலா,அஜிரேட்டம்,கேலண்டுலா,கிளாடியோலஸ்,லில்லியம்,சூரியகாந்தி,சப்னேரியா போன்றவை பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலர் பாத்திகளில் நடவு செய்யப்பட்டு பொலிவுடன் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

45 ஆயிரம் தொட்டிகள் மலர் காட்சி மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்படவுள்ளது. இம்முறை 126வது மலர் காட்சியை முன்னிட்டு பல வண்ணங்களை கொண்ட ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு பிரமாண்ட டிஸ்னி வோர்ல்டு,காளான்,ஆக்டோபர் மற்றும் மலர் கோபுரங்கள் உட்பட 10 வகையான மலர் அலங்காரங்கள் பல லட்சம் ரோஜாக்கள், கார்னேசன் மற்றும் செவ்வந்தி பூக்களை கொண்டு அலங்காரங்கள் உருவாக்கப்படவுள்ளது. இதற்கான ஆயுத்த பணி துவக்கப்பட்டுள்ளது.

தற்போது அலங்காரங்கள் மேற்கொள்வதற்காக இரும்பு கம்பிகளை கொண்டு மாதிரி உருவங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக பெங்களூர், ஒசூர் போன்ற பகுதிகளில் இருந்து கார்னேசன் மலர்கள் கொண்டு வரப்படவுள்ளன. மேலும், பல ஆயிரம் மலர்களை கொண்டு 10 அலங்கார வளைவுகள் உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

இதுதவிர மலர்களை கொண்டு பல்வேறு ரங்கோலி அமைக்கப்படுகிறது. பல்வேறு மலர் அலங்காரங்கள்,மலர் கோபுரங்கள் ஆகியவை அமைக்கப்படவுள்ளது. மேலும், தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய கண்காட்சி பொருட்கள் கொண்டு வரப்பட்டு காட்சியில் வைக்கப்படவுள்ளன.

The post ஊட்டி மலர் கண்காட்சிக்கு அலங்கார பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: