கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு

கன்னியாகுமரி: தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரேமதாஸ் என்பவர் தனது 7 வயது மகள் ஆதிஷாவுடன் கடற்கரையில் நின்றபோது இருவரும் ராட்சத அலையில் சிக்கினர். கடற்கரையின் அருகில் இருந்தவர்கள் பிரேமதாஸை மீட்ட நிலையில் சிறுமி ஆதிஷாவை அலை இழுத்துச் சென்றது. ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி ஆதிஷாவை மீனவர்கள் உதவியுடன் போலீசார் தேடி வந்தனர்.

புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் பிரேமதாஸ் (42). கொத்தனார். இவரது மகள் ஆதிஷா (7), நேற்று பிற்பகல் 2 மணியளவில் தந்தையும் மகளும் தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுக பகுதிக்கு பைக்கில் வந்தனர். பின்னர் இருவரும் கடற்கரையோரத்தில் நின்று கடலை ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது வேகமாக வந்த அலை பிரேமதாஸ் மற்றும் ஆதிஷா ஆகிய இருவரையும் இழுத்து சென்றது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் மீனவர்கள் உடனடியாக இரண்டு பேரையும் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் பிரேமதாஸ் உடன டியாக மீட்கப்பட்டார். ஆனால் 7 வயது சிறுமி ஆதிஷா கடலில் மாயமானார். மாலை வரை தேடியும் கிடைக்கவில்லை. இது பற்றி அறிந்ததும் பிரேமதாசின் குடும்பத்தினர், உறவினர்கள் கடற்கரையில் திரண்டனர். புதுக்கடை போலீசாரும் வந்து விசாரணை நடத்தினர். மீட்கப்பட்ட பிரேமதாஸ், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தென்னிந்திய பெருங்கடலில் மே 4 மற்றும் 5 ம் தேதிகளில் அதிக தாக்கத்துடன் கடல் சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன் பாதிப்பு குமரி மாவட்ட கடல் பகுதியிலும் இருக்கும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து கலெக்டர் நேற்று முன் தினம் (4ம்தேதி) இரவு விடுத்த அறிவிப்பில், குமரி கடலில் 1.5 மீட்டர் அலைகளின் உயரம் இருக்கும். 45 கி.மீ. முதல் 6.5 கி.மீ. வேகத்தில் காற்று வேகமாக வீசும் எனவே மீனவர்கள், பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி நேற்று முன் தினம் இரவில் இருந்தே குமரி மாவட்ட கடலில் அலைகளின் வேகம் அதிகமாக இருந்தது. நேற்று காலையிலும் இதன் தாக்கம் இருந்த தால் கன்னியாகுமரி, குளச்சல் உள்ளிட்ட பகு திகளில் கடலில் யாரும் இறங்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்த வகையில் இருந்தது.

இந்நிலையில் நேற்று தனது தந்தையுடன் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். படகில் சென்று தேடும் பணியில் ஈடுபட்ட மீனவர்கள் சிறுமியின் உடலை மீட்டனர். சிறுமியின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

The post கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: