முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு தாக்கல் செய்துள்ளது.அதில்,\”முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. மழைக்காலங்களில் தொடர்ச்சியாகவும், மற்ற நேரங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் அணையை மேற்பார்வை குழுவானது தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. எனவே, ஆய்வு செய்ய புதியகுழு எதுவும் தேவையில்லை’’ என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் 2006, 2014ம் ஆண்டு தீர்ப்புக்களின் படி தொடர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முல்லைப் பெரியாறு மேற்பார்வை குழுவானது அணை பாதுகாப்பு சட்டப்படி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்.

பராமரிப்பு பணிகளுக்கான கருவிகளையும், பொருள்களையும் வள்ளக்கடவு சாலை வழியாக அணைக்கு கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்க கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள்படி பேபி அணையில் தமிழ்நாடு அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரளா அரசு தமிழகத்துக்கு உரிய அனுமதிகளை வழங்க உத்தரவிட வேண்டும். ஒவ்வொரு பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்வதற்கான அனுமதி வழங்க கேரளா ஐந்து மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தாமதம் செய்கிறது.

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக்கோரும் போது கேரள அரசு தாமதம் செய்கிறது. அதுகுறித்த பட்டியலும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மொத்தம் 13 வகையான பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு ஒப்புதல் வழங்க எத்தனை மாதங்கள் தாமதம் செய்தது என்பது குறித்த விரிவான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு appeared first on Dinakaran.

Related Stories: