இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி

கொடைக்கானல்: இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளுக்கு தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் திறக்கப்பட மாட்டாது என ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்துல் கனி ராஜா தெரிவித்தார்.

ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வருவதால் கடும் போக்குவரது நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல 7ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அங்குள்ள ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில், கொடைக்கானலில் ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், இ-பாஸ் நடைமுறையினால் குறைந்தளவிலான சுற்றுலாப்பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஓட்டல் ரிசார்ட் உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள், உணவக உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் மிகவும் பாதிக்கப்பட உள்ளனர். எனவே நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த இ-பாஸ் நடைமுறையை தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் சங்க தலைவர் அப்துல் கனிராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முன்னெடுப்புகளை ஓட்டல் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து செய்யும். இதற்காக இன்று நாங்கள் மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்த ேகாரிக்கை மனுவை கொடுக்கவுள்ளோம். அதையும் மீறி இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டால் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் போராட்டம் செய்வோம். முதற்கட்டமாக கொடைக்கானலில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் மூடப்படும். கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எங்களது தங்கும் விடுதிகள், உணவு விடுதிகளும் திறக்கப்பட மாட்டாது. இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யும் வரை இதுபோல் போராட்டங்களை தொடர்ந்து செய்வோம். இவ்வாறு பேசினார்.

The post இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: