மகளிர் போலீசாரை அருவருப்பாக பேசிய யூடியூபர் சங்கருக்கு எதிராக தெருவில் இறங்கி போராட்டம்: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் அறிக்கை

சென்னை: மகளிர் போலீசாரை அருவருக்கத்த விதமாக பேசிய யூடியூபர் சங்கருக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, பெண்களின் சுயமரியாதைக்கு இழுக்கு என்றால் தெருவில் இறங்கி போராட தயாராக உள்ளோம் என்று தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்ணுரிமை, பெண் பாதுகாப்பு எனப் பெண்கள் நலனுக்காக வெயில் என்றும் மழை என்றும் புயல் என்றும் பாராமல் கடுமையாக மக்கள் பணியாற்றும் நமது பெண் காவலர்களை, மகளிர் காவல் துறையை குறித்து கேவலமாக பேசியதற்காக யூடியூபர் சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல தடைகளையும் இன்னல்களையும் கடந்து பெண்கள் காவல்துறையில் பணியாற்றுவதை நாம் கொண்டாட வேண்டும், பெண்ணினத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் பாரதி கண்ட புதுமைப் பெண்களாக அவர்கள் பணியாற்றுவதை கண்டு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். அதைவிடுத்து காவல்துறையில் உள்ள பெண்களையும், மூன்றாம் பாலினத்தவரையும், அருவருக்கத்தக்க விதமாக யூடியூபர் சங்கர் பேசியதை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

பாரதி, அம்பேத்கர், பெரியார், போன்ற தத்துவார்த்த தலைவர்கள் கண்ட புதுமை பெண்கள் நாங்கள். சமூக மாற்றத்துக்கான ஒரு சீரிய சித்தாந்தத்தை முன்னெடுத்து அதன் வழியில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தமிழக காவல்துறையை சார்ந்த மகளிர் காவலாளிகள். அவர்கள் பெண் என்பதால் நீங்கள் எதை வேண்டுமென்றாலும் பேசி விட முடியாது. எங்கள் பெண்களின் சுயமரியாதைக்கு ஒரு இழுக்கு என்றால் அதற்கு எதிராக தமிழக மகளிர் காங்கிரஸ், தெருவில் இறங்கிப் போராட தயாராக உள்ளோம். பெண்ணினத்தை போற்ற கண்ணியத்தை அளவுகோலாக வைத்து எடை போடுங்கள்.

The post மகளிர் போலீசாரை அருவருப்பாக பேசிய யூடியூபர் சங்கருக்கு எதிராக தெருவில் இறங்கி போராட்டம்: தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: