உதகைக்கு செல்லும் பயணிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா பயண அட்டை: போக்குவரத்து கழகம் அறிமுகம்

சென்னை: உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா பயண அட்டையை போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது. கோடைகாலம் தொடங்கியதும் பொதுமக்கள் மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தொடங்கிவிட்டனர். குறிப்பாக ஊட்டிக்கு செல்லுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் பயணத்தை எளிதாக்க உதகையை சுற்றிப்பார்க்க ஒரு நாள் சுற்றுலா பயண அட்டையை அரசு போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பயண அட்டையை பெறும் சுற்றுலா பயணிகள் மத்திய பேருந்து நிலையம், தண்டர் வேர்ல்ட், படகு இல்லம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பென்ச் மார்க் டி மியூசியம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் தாங்கள் விரும்பும் நேரம் வரை பார்வையிட்டுவிட்டு மற்றொரு சுற்றுலா தளத்திற்கு வேறு ஒரு சுற்றுலா பேருந்தில் கட்டணம் இன்றி அதே பயண அட்டை மூலம் பயணம் செய்யலாம். ஒரு நாள் முழுவதும் ஒரு சுற்றிற்கு இந்த அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யலாம்.

இந்த சுற்றுலா பயண அட்டைக்காக பெரியவர்களுக்கு ரூபாய் 100, சிறுவர்களுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பயணிகளின் கூட்டநெரிசலை தடுக்க கோவை புதிய பேருந்து நிலையம் மற்றும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தினசரி இயக்கப்படும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து உதகைக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படும் என்றும் கோவை அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்து கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

The post உதகைக்கு செல்லும் பயணிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா பயண அட்டை: போக்குவரத்து கழகம் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: