8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை செய்தவன் தமிழ்நாட்டை கலக்கிய ரவுடி ஆவடியில் துப்பாக்கி முனையில் கைது: துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை அதிரடி

சென்னை: 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து பல கொலை, கொள்ளைகளை செய்து வந்தவரும், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி முத்துசரவணனின் அண்ணனுமான ரவுடி கருப்பசாமி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டான். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அதிமுக பிரமுகர் பார்த்திபனை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய 2 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதில் முத்துசரவணனுக்கு ஆலோசனையும், கொலைக்கு சதிதிட்டம் வகுத்து கொடுத்து வந்ததும் அவனுடைய அண்ணன் கருப்பசாமி என்று தெரியவந்தது. இதனால் கருப்பசாமியை கைது செய்ய ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்பேரில் ரெட்ஹில்ஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் உதவி கமிஷனர் ராஜாராம், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தியதில், கருப்பசாமியின் புகைப்படம் கூட எங்கும் இல்லை என்று தெரியவந்தது.

அவன் செல்போனையும் பயன்படுத்துவது இல்லை. மோடம் அல்லது டாங்கிள் மூலம் இன்டெர்நெட் இணைப்பு பெற்று வாட்ஸ்அப் அல்லது பேஸ் டைம் மூலம் பேசி வருவது தெரியவந்தது. செல்போன் பயன்படுத்தினால் போலீசார் எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதால் அவ்வாறு செய்து வந்தது தெரிந்தது. இதனால் சவாலாக எடுத்துக் கொண்ட தனிப்படை அவனை பல நாட்களாக தேடி வந்தனர். 2016ம் ஆண்டு முதல் கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தான்.

ஆனால் 2017ம் ஆண்டில் சோழவரத்தில் ரவுடி சாலமென், 2019ல் ரவுடி பிரசாந்த் ஆகியோரை கொலை செய்துள்ளான். அதன்பின்னர், ஹவாலா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தான். அவர்கள் புகார் கொடுக்காததால் தொடர்ந்து அவர்களை மிரட்டி, வழிமறித்து கொள்ளையடித்து வந்தான். ஆனால் தன்னுடைய தம்பி முத்துசரவணனுக்கு மூளையே இவன்தான். போலீசார் தன்னுடைய தம்பியை கொலை செய்ததால் அதற்கு பழிவாங்க திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் கருப்பசாமி சென்னையில் முகாமிட்டு குற்றச் சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டிருந்த தகவல் தனிப்படை போலீசாருக்கு தெரிந்தது. அவனை துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். தீவிர விசாரணைக்கு நடத்திய பின்னர் கருப்பசாமி சிறையில் அடைக்கப்பட்டான். போலீசில் பிடிபட்ட பிறகுதான் அவனுடைய புகைப்படமே கிடைத்தது. போலீசுக்கு சவாலாக விளங்கிய ரவுடியை பிடித்த தனிப்படை போலீசாரை ஆவடி ேபாலீஸ் கமிஷனர் சங்கர் பாராட்டினார்.

The post 8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை செய்தவன் தமிழ்நாட்டை கலக்கிய ரவுடி ஆவடியில் துப்பாக்கி முனையில் கைது: துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: