வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.25லட்சம்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: வெடிவிபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.25லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.  இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகில் உள்ள கீழ உப்பிலிகுண்டு பகுதியில் கல் குவாரி கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்ததில் 3 பேர் மரணமடைந்துள்ளனர். 8 பேர் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிவிபத்து நடந்த இடத்திற்கு அருகில் கடமங்குளம் பகுதியில் இருந்த 40க்கும் மேற்பட்ட வீடுகளில் தெறிப்பும், பிளவும் ஏற்பட்டு வசிக்க முடியாத அளவுக்கு சேதமாகி உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு வருவதற்கு தொழில்துறை பாதுகாப்பு பிரிவு பொறுப்பேற்க வேண்டும். இதில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டிருப்பதும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று நிவாரணம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பும் ஆறுதல் அளிக்கிறது.

மேலும், வெடிபொருள் வெடிப்பு விபத்தில் பலியான குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தோர் முற்றிலும் குணமடைந்து பணிக்கு திரும்பி மறுவாழ்வு பெறும் வரையிலான காலத்திற்கு இழப்பீடு வழங்கவும், வீடுகளை இழந்து நிற்கும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை புதுப்பித்து கட்டித்தரவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.25லட்சம்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: