கொளுத்தும் வெயிலுக்கு இடையே மழை: ஏற்காடு மற்றும் குடியாத்தம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி..!

சேலம்: கொளுத்தும் கோடை வெயிலுக்கு இடையே சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டியது. வறண்ட வானிலை காரணமாக தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாவே உள்ளது. சேலத்தை பொறுத்தவரை கடந்த 10 நாட்களாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது. இந்நிலையில், திடீரென 3 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. ஏற்காடு பகுதியில் உள்ள அரை மணி நேரம் பெய்த மழையால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேபோல வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டி உடன் கோடை மழை கொட்டியது. கடந்த 35 நாட்களாக வேலூரில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று வேலூரில் அதிகபட்சமாக 110.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. இந்நிலையில், வேலூர் சுற்றுவட்டார பகுதியில் குடியாத்தம், பேனாம்பட்டு உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால் குடியாத்தம் பகுதியில் வெப்பம் தணிந்து குளிச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

The post கொளுத்தும் வெயிலுக்கு இடையே மழை: ஏற்காடு மற்றும் குடியாத்தம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி..! appeared first on Dinakaran.

Related Stories: