கோவை, நீலகிரி மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் பல வாக்காளர் பெயர்கள் நீக்கம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

கோவை: கோவை, நீலகிரி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பாஜ வாக்காளர்கள் பெயர் விடுபட்டுள்ளதாக கோவையில் நேற்று எல்.முருகன் நிருபர்களிடம் கூறினார். சென்னையில் இருந்து நேற்று கோவை வந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள ஸ்டிராங் ரூம்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கேமராக்கள் செயல்படாமல் 20 நிமிடம் செயல் இழந்துவிட்டது. இதனை தேர்தல் ஆணையம் கால சூழ்நிலை என சொல்கிறார்கள். எந்த காரணமும் சொல்லாமல் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். எந்தவித சந்தேகத்திற்கும் இடம் கொடுக்காமல் தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்களும் பல இடங்களில் விடுபட்டுள்ளது. குறிப்பாக பாஜவை சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் கோவை, நீலகிரி, தென் சென்னை அல்லாது தமிழகம் முழுவதும் விடுபட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையமும், அதன் அதிகாரிகளும் பலமுறை விளக்கம் அளித்து உள்ளார்கள். இவ்வாறு கூறினார்.

The post கோவை, நீலகிரி மட்டுமல்ல… தமிழகம் முழுவதும் பல வாக்காளர் பெயர்கள் நீக்கம்: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: