நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து: மே 13 முதல் துவக்கம்

நாகை: நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு வரும் மே 13ம் தேதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குகிறது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14ம் தேதி துவங்கியது. பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இதை தொடங்கி வைத்தார். இதன் மூலம் இருநாட்டு உறவு மேம்படும், மீனவர்களிடையே நல்லுறவு ஏற்படும் என்று கூறப்பட்டது.

அதன்படி கேரள மாநிலம் ெகாச்சினில் இருந்து வந்த செரியாபாணி என்ற கப்பல் சில முறை இலங்கைக்கு சென்று வந்தது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் கப்பலில் மேலும் சில அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், பயண நேரத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் மழையை காரணம் காட்டி அக்டோபர் 20ம் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதாவது போக்குவரத்து துவங்கிய 6 நாளிலேயே கப்பல் நிறுத்தப்பட்டது.

மழை முடிந்து ஜனவரி அல்லது பிப்ரவரியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கப்பல் இயக்கப்படவில்லை. இந்நிலையில், வரும் மே 13ம் தேதி முதல் மீண்டும் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை வந்த செரியாபாணி கப்பலுக்கு பதில், இம்முறை அந்தமானில் இருந்து சிவகங்கை என்ற கப்பல் வருகிறது. இந்த கப்பல் வரும் மே 10ம் தேதி நாகை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள சிவகங்கை கப்பல் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் ரூ.5,000, மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் ரூ.7,000 கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. இந்தியர்களுக்கு விசா கிடையாது என இலங்ைக அரசு அறிவித்துள்ள காரணத்தால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து: மே 13 முதல் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: