தேர்தலில் பண வினியோக பிரச்னை; போஸ்டர் யுத்தம், ேபாலீசில் எப்ஐஆர் புகார் விஸ்வரூபம்; அண்ணாமலை தலைமையிலான நாளைய பாஜ கூட்டம் திடீர் ரத்து: நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி

சென்னை: பாஜவில் மக்களவை தேர்தல் நேரத்தின் போது நடந்த பணம் வினியோகம் பிரச்னை, போஸ்டர் யுத்தம், காவல் நிலையத்தில் எப்ஐஆர் புகார் எதிரொலியாக சென்னையில் அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெற இருந்த பாஜ ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ 19ம் தேதி தொகுதிகளில் போட்டியிட்டது. மொத்தம் 23 தொகுதியில் பாஜவின் தாமரை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாஜ சார்பில் வேட்பாளர்கள் களம் இறங்கப்பட்டது முதல் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்தது. அதாவது பாஜவினர் தேர்தலில் யாருக்கும் பணம் தர மாட்டார்கள் என்று கட்சி தலைவர் அண்ணாமலை மேடைக்கு மேடை பேசி வந்தார். ஆனால் கோவை தொகுதியில் பாஜ சார்பில் பணம் கொடுத்து பலர் சிக்கிய சம்பவம் வெட்ட வெளிச்சமானது. தவிர வெற்றி வாய்ப்பு உள்ள பல தொகுதிகளில் பண பட்டுவாடாவில் ஈடுபட்டது வெளிச்சமானது.

மேலும் நயினார் நாகேந்திரனின் உதவியாளரிடம் 4 கோடி பணம் சிக்கியது முதல் பல மோசடிகளில் மக்களவை தேர்தலின் போது பாஜ ஈடுபட்டது அம்பலமானது. மேலும் மத்திய சென்னை தொகுதியில் 18 சி, வடசென்னையில் 12 சி, தென் சென்னையில் 15 சி, கோவைக்கு 25 சி என்று வேட்பாளர்களுக்கு ஏற்ற மாதிரி செலவுக்காக பணம் வழங்கப்பட்டது. கடந்த தேர்தலின் போது பாஜவினர் தேர்தல் செலவுக்கு ஆர்எஸ்எஸ் மூலம் பணம் வழங்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு செலவுக்கும் வேட்பாளர்களிடம் கணக்கு கேட்டனர். இதனால், பணத்தை வேட்பாளர்கள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த முறை நேரடியாக வேட்பாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. அவர்களும் முறையாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு தேர்தல் முடிந்ததும் எதிரொலிக்க தொடங்கியது. நிர்வாகிகள் பெருமளவில் சுருட்டி கொண்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர். பாஜவில் 90 சதவீதம் பேர், சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும், கொலை, கொள்ளை குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காகவும்தான் பாஜவில் இணைந்தனர். இதனால், இதுதான் சமயம் என தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்ட பணத்தை வாரி சுருட்டி கொண்டதாக கட்சிக்காக ஆண்டாண்டுக்காலம் தங்கள் சொந்த செலவில் கட்சியை வளர்க்க பாடுபட்டவர்கள் குமுறி வருகின்றனர். கட்சி மேலிடம் வழங்கிய பணம் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கும் செல்லவில்லை. வாக்காளர்களுக்கும் வழங்கப்படவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது பாஜ சார்பில் வாட்ஸ் அப் குரூப்களில் அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஆடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். பல பதிவுகளில் கட்சிக்காக பல ஆண்டு உழைத்து உள்ளோம். ஆனால் மண்டல தலைவர்கள் மேலிடம் கொடுத்த பணத்தை மொத்தமாக அபகரித்து கொண்டனர். கட்சிக்காக பாடுபட்ட எங்களுக்கு பணம் வந்து சேரவில்லை என்ற ரீதியில் ஆதங்கத்தை வெளிப்படுத்த தொடங்கி உள்ளனர்.வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் தெற்கு மண்டல் தலைவர் பிரபா, பெரம்பூர் மத்திய மண்டல தலைவர் கஸ்தூரி, திரு.வி.க நகர் மண்டல தலைவர் முரளி ஆகியோருக்கு எதிராக பல்வேறு ஆடியோ மெசேஜ்கள் தொடர்ந்து வாட்ஸ் அப் குரூப்புகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த ஆடியோவில் ஒரு பூத்துக்கு மேலிடம் ரூ.8000 வழங்கியது, அதில் ரூ.5000 மட்டுமே மண்டல் தலைவர்கள் செலவு செய்தார்கள். மீதியை சுருட்டி விட்டார்கள், ஒரு மண்டல தலைவருக்கு குறைந்தபட்சம் 70 பூத்துகள் வரை வருகிறது. அப்படியிருக்க ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்துள்ளார்கள். கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பணம் தரவில்லை என உள்ளது.

பெரம்பூர் தெற்கு மண்டல பகுதியை சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்ராஜ் என்ற கடம்பூர் வேல்ராஜ் பதிவிட்டுள்ள ஆடியோ மெசேஜில், ‘எங்களுக்கு முறையான உணவு வழங்கவில்லை. பிரியாணி சரியில்லை என மண்டல் தலைவரிடம் சொன்னால், சிரித்து கொண்டே அப்படியா… சந்தோஷம் என்கிறார். பிரசாரத்திற்கு வந்தவர்களுக்கு பணம் கொடுத்தார்களா என கேட்டால் பேச மறுக்கிறார். கட்சியில் உழைத்தவர்களுக்கு எதுவும் வரவில்லை. மண்டல தலைவர்கள் பணத்தை கையாடல் செய்துள்ளார்கள் என்ற ரீதியில் பேசியுள்ளனர். இதுபோன்று ஒவ்வொரு மண்டல பகுதியிலும் கட்சி நிர்வாகிகள் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நடிகை ராதிகா போட்டியிட்ட விருதுநகர் தொகுதியில் தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்ட ₹40 லட்சத்தை பாஜ நிர்வாகிகள் சுருட்டியதாக சொந்த கட்சியினரே போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதில், ‘நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு. பாஜ விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி, பூத் ஏஜென்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ₹40 லட்சம் வரை சுருட்டிய இந்த நபர்கள் மீது, பாஜ மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கட்சியினருக்குள் அடிதடி அளவுக்கு விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் தென்சென்னை கிழக்கு மாவட்ட பாஜ பொதுச் செயலாளர் முத்துமாணிக்கம், கடந்த 20ம் தேதி, துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பத்தில் உள்ள பாஜ மண்டல தலைவர் ஜெகநாதன் வீட்டில் அமர்ந்து, தேர்தல் பணியாற்றியது தொடர்பாக நிர்வாகிகளுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த துரைப்பாக்கம் பாஜ துணை தலைவர் வாசு (46), 196 வது வட்ட தலைவர் வெங்கட் (36), 196 வட்ட வட்ட செயலாளர் ஜெயகுமார் (50), டீக்காராம், அவரது மகன் விக்னேஷ், மாரியம்மாள் ஆகிய 6 பேர், ‘பூத் ஏஜென்ட்டுக்கு பணம் ஏன் கொடுக்கவில்லை’ என கேட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர் முத்துமாணிக்கத்தை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக முத்துமாணிக்கம், துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து வாசு, வெங்கட், ஜெயகுமார் ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை அமைந்தகரையில் நேற்று அடிதடி சம்பவம் அரங்கேறியது.

சென்னை அமைந்தகரை அய்யாவு திருமண மண்டபத்தில் மத்திய சென்னை தொகுதி பாஜ தலைமை பணிமனையில் நேற்று முன்தினம் அமர்ந்திருந்த அண்ணாநகர் வடக்கு மண்டல தலைவர் ராஜ்குமாரை மத்திய வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி என்பவர் பளார் என கன்னத்தில் அறைந்துள்ளார். இருவரும் மாறி, மாறி தாக்கி கொண்டு பயங்கர மோதலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அமைந்தகரை இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து சமாதானப்படுத்தினர். பின்னர் இருவரும், அமைந்தகரை போலீசில் புகார் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், “தேர்தல் பணிக்காக பாஜ சார்பில் வாட்ஸ் அப் குருப்பில் கட்சி சார்பாக பதிவு செய்து வந்துள்ளனர்.

அந்த குருப்பில் மூர்த்தி, ராஜ்குமார் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் வாட்ஸ் குருப்பில் திட்டி கொண்டனர். ஆத்திரமடைந்த ராஜ்குமார், வாட்ஸ் அப் கால் மூலம் முர்த்திக்கு போன் செய்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மூர்த்தி பாஜவில் சீனியர் என்றும் ராஜ்குமார் என்பவருக்கு அண்ணாநகர் வடக்கு மண்டல தலைவர் பதவி கொடுத்ததில் ஏற்கனவே இருவருக்கும் மோதல் ஏற்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக மூர்த்தி, ராஜ்குமாரை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து அமைந்தகரை போலீசார் மூர்த்தி, ராஜ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி தேர்தலில் பணம் வினியோக பிரச்னை தொடர்பாக பாஜ தலைமைக்கு தொடர்ந்து புகார் மேல் புகார் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ரிசல்ட் வருவதற்குள் கட்சிக்குள் இப்படி புகார் வருவது தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை பாஜ தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பண பிரச்னையில் நிர்வாகிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது பாஜவில் தற்போது பரபரப்பு டாபிக்காக இருந்து வருகிறது. நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

The post தேர்தலில் பண வினியோக பிரச்னை; போஸ்டர் யுத்தம், ேபாலீசில் எப்ஐஆர் புகார் விஸ்வரூபம்; அண்ணாமலை தலைமையிலான நாளைய பாஜ கூட்டம் திடீர் ரத்து: நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: