புதுகை அருகே பரபரப்பு; மாட்டு சாணம் கலந்த குடிநீர் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி குருவண்டான் தெருவில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது கடந்த 2013-2014ம் ஆண்டு கட்டப்பட்டது. இத்தொட்டியில் இருந்து அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் ரவிக்குமார்(37) என்பவருக்கு குடிநீர் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர் திருவோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீரில் மாட்டு சாணம் கலந்து வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து ஆதிதிராவிடர் தெருவில் இருக்கும் இளைஞர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தனர். அப்போது குடிநீர் தொட்டிக்குள் மாட்டு சாணம் கலந்திருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் ஆணையர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், கல்லாக்கோட்டை ஆர்ஐ பிரியதர்ஷினி, விஏஓ சுபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்ய ஊராட்சி நிர்வாகத்துக்கு ஆணையர் பெரியசாமி உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆர்ஐ பிரியதர்ஷினி ஆய்வு அறிக்கையை தாசில்தார் விஜயலட்சுமிக்கு அனுப்பி வைத்தார். மேலும் மாட்டு சாணம் கலந்த தண்ணீரின் மாதிரி புதுக்கோட்டையில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் கந்தர்வகோட்டை டிஎஸ்பி ராகவி நேற்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். தொட்டி அருகே 10க்கும் மேற்பட்ட போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

The post புதுகை அருகே பரபரப்பு; மாட்டு சாணம் கலந்த குடிநீர் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: