நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு

ராமநகரா: கர்நாடக முதல்வராக வருவேன் என்று மக்களிடம் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திடீரென பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார் பேசுகையில், ‘என்னை நம்புங்கள்; நான் கர்நாடக மாநில மக்களின் மகன். நான் முதல்வராக வருவேன். உங்களது நம்பிக்கையை இழக்க வேண்டாம். உங்களுக்காக சேவை செய்வேன்’ என்று பேசினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து, முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையாவுக்கும், டி.கே.சிவ்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்சியின் மாநிலத் தலைவராக டி.கே.சிவக்குமார் இருந்ததால், அவரது தலைமையில்தான் காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்றது என்று கூறப்பட்டது. அதனால் அவர் முதல்வர் பதவிக்கு உரிமை கோரினார். இருப்பினும், காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு சித்தராமையாவை முதல்வராக்கியது. டி.கே.சிவகுமாரை சமாதானப்படுத்தி அவரை மாநில துணை முதல்வராக நியமித்தது. இந்த நிலையில், தற்போது டி.கே.சிவக்குமாரின் பேச்சு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: