பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் அதிகார அமைப்புகள் பிரச்னையால் மாணவர்களின் கல்விதான் பாதிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் கவலை

சென்னை: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதிகளை சேர்க்காததை எதிர்த்து வழக்கறிஞர் பி.ஜெகநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ஏற்கனவே பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவை நியமித்து ஆளுனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தன்னை இணைக்க மனுதாரர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் சென்னை பல்கலைக்கழகத்தை இணைக்க மனுத்தாக்கல் செய்துள்ளோம் என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தற்காலிக குழுவை அமைத்துள்ளது. மாணவர்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைகழகம் துணைவேந்தர் இல்லாமல் செயல்படுகிறது. இது மோசமான நிலை. துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பாக அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்னை காரணமாக மாணவர்களின் கல்வி தான் பாதிக்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி குறித்து தான் நீதிமன்றம் கவலை கொள்கிறது. எனவே பல்கலைக்கழகங்களை நிர்வாகிக்கும் அதிகார அமைப்புகள் கவனமுடன் செயல்பட வேண்டும் எனக் கூறி வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூன் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் அதிகார அமைப்புகள் பிரச்னையால் மாணவர்களின் கல்விதான் பாதிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் கவலை appeared first on Dinakaran.

Related Stories: