நெல்லை, தூத்துக்குடிக்கு சென்னையில் இருந்து மேலும் 2 சிறப்பு ரயில்கள்: தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை: மக்களவைத் தேர்தலை மையமாகக் கொண்டு தெற்கு ரயில்வே சென்னையில் இருந்து நெல்லை, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக மேலும் இரு சிறப்பு ரயில்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் (06089) இன்று (20ம் தேதி) சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, நாளை (21ம் தேதி) காலை 11.15 மணிக்கு நெல்லை வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில் (06090) நாளை 21ம் தேதி நெல்லையில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள்(22ம் தேதி) அதிகாலை 4.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்களில் 12 குளிர்சாதன வசதி மூன்றடுக்கு குறைந்த கட்டண படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌ இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.இதுபோல் வார இறுதிநாள் கூட்டத்தை சமாளிக்க நேற்று சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

அதன்படி சென்னை சென்ட்ரல் – தூத்துக்குடி சிறப்பு ரயில் நேற்று காலை 11.30 மணிக்கு சென்ட்ரலில் புறப்பட்டு இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி வந்து சேர்ந்தது. இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்கள் வழியே வந்தது. ஓட்டுப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ரயில் பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் சென்னை சென்ட்ரலுக்கு செல்லும், அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லை, தூத்துக்குடிக்கு சென்னையில் இருந்து மேலும் 2 சிறப்பு ரயில்கள்: தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: