இந்நிலையில், ஆந்திரா, தெலங்கானா, தமிழக போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவரும், பல கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவருமான மிளகாய்பொடி வெங்கடேசன், தற்போது பாஜவில் ஓபிசி அணி மாநில செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், 5 தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பி.டி. மூர்த்தி நகர் பகுதி வீர வாஞ்சிநாதன் தெருவில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை சோதனை செய்யச் சென்றனர்.
அப்போது, வெங்கடேசன் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் வீடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சோதனையின் முடிவில் பணம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்- செம்மரக்கட்டை கடத்தல் ஆசாமி மிளகாய்ப்பொடி வெங்கடேசன் வீட்டில் பறக்கும் படை சோதனை appeared first on Dinakaran.