தமிழகத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது; வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: இறுதி வேட்பாளர் பட்டியல் 30ம் தேதி வெளியாகும்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. 30ம் தேதி மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், வேட்பாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 20ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கடந்த 5 நாட்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதன்படி திமுக கட்சியை சேர்ந்த பெரும்பாலாள வேட்பாளர் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கடந்த 25ம் தேதி ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்தனர். நேற்றும் பெரும்பாலானவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுவுடன் வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலும் தாக்கல் செய்யப்பட்டது.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (27ம் தேதி) கடைசி நாளாகும். அதன்படி இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய 3 மணிக்குள் வரும் வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு 3 மணிக்கு பிறகும்கூட மனு தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. மாலை 3 மணிக்கு பிறகு வரும் வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

அதன்படி திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தேர்தல் அதிகாரி முன்னிலையில் உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டார். சிதம்பரத்தில் போட்டியிட உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் இன்று மனுதாக்கல் செய்தார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் மனு தாக்கல் செய்தார். அதேபோன்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 10 பேரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அதிகம் பேர் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து இருந்தனர். இன்று மட்டும் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளிலும் 200க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களுக்கு சின்னங்கள் கிடைப்பதில் பிரச்சனை இல்லை. அதற்கான படிவம் கிடைத்ததும் சின்னம் ஒதுக்கப்பட்டு விடும். மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு அவர்கள் கேட்கும் சின்னத்தை வேறு யாரும் கேட்காமல் இருந்தால் அந்த சின்னம் கிடைத்து விடும். இல்லையென்றால் தேர்தல் கமிஷன் முடிவு செய்து வேட்பாளரின் சம்மதத்துடன் வேறு சின்னங்களை ஒதுக்கும். ஒரே சின்னத்தை 2 சுயேச்சைகள் கேட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒதுக்கப்படும்.

சுயேட்சை வேட்பாளர்களுக்கு 30ம் தேதி மாலை சின்னம் ஒதுக்கப்படும். வேட்புமனுக்கள் மீது நாளை (28ம் தேதி) பரிசீலனை நடைபெறும். 29 மற்றும் 30ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் வாபஸ் பெறலாம். 30ம் தேதி மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் மேலும் தீவிரம் அடையும். ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 7வது கட்டமாக மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இது முடிவடைந்தது தமிழகம் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வருகிற ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும்.

The post தமிழகத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது; வேட்புமனு தாக்கல் இன்று முடிந்தது: இறுதி வேட்பாளர் பட்டியல் 30ம் தேதி வெளியாகும் appeared first on Dinakaran.

Related Stories: