சென்னை: அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகளால், தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் உள்ளதாக நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் வெளியாகியிருக்கும் 2027ம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டின் முதலீட்டுத் தரவுகள் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரிய வீழ்ச்சியைக் காட்டுகின்றன.
மற்ற மாநிலங்களில் புதிய ஆட்சிகள் தொடங்கியவுடன் முதலீடுகள் பல மடங்கு உயர்ந்துள்ள வேளையில், தமிழகத்தில் முதல்வர் விஜய்யின் அரசு பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்த முதலீடுகள் முந்தைய காலாண்டை காட்டிலும் 74.5 சதவீதமும், தனியார் முதலீடுகள் 77.63 சதவீதமும் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன.
முன்மொழியப்பட்ட திட்டங்களில் வெறும் ரூ.11,237 கோடியை மட்டுமே பெற்று, தேசிய அளவில் தமிழகம் 17வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதல்வர் விஜய்யிடம் போதிய திட்டமிடல் இல்லாததும், புதிய முதலீட்டாளர்களை கவரும் கொள்கைகள் தவெக அரசிடம் இல்லாததுமே இத்தகைய வீழ்ச்சிக்கு காரணம். இதனால், தமிழகத்திற்கு வர வேண்டிய வெளிநாட்டு தனியார் முதலீடுகளும் ரூ.2,080 கோடியிலிருந்து ரூ.720 கோடியாக குறைந்துள்ளன.
வெறும் விளம்பரப் பேச்சுகளாலும், ரீல்ஸ்களாலும் மட்டும் புதிய முதலீடுகளைக் கொண்டுவர முடியாது என்பதை தவெக அரசுக்கு இந்த தரவுகள் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. எனவே, முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக சரியான தொழில் கொள்கைகளை உருவாக்கி, சரிந்துவரும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்; இல்லையேல், நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதை தவெக அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
