×

எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தால் அமளி; நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றம்

 

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு, ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோதிலும் இரு அவைகளிலும் பல்வேறு மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. ஜூலை மாதம் 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீட் வினாத்தாள் கசிவு, ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

நேற்று காலை மக்களவை தொடங்கியதும் வழக்கம்போல எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சபாநாயகர் ஓம் பிர்லா அவையை பகல் 12மணி வரை ஒத்திவைத்தார். கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மக்களவையில் கேள்வி நேரத்தை முழுமையாக நடத்த முடியவில்லை என்றும் திட்டமிடப்பட்ட இடையூறுகள் அவையின் கண்ணியத்தை குறைப்பதாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா வருத்தம் தெரிவித்தார்.

பகல் 12மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கியபோதும் இதே நிலை நீடித்தது. அவையை சுமூகமாக நடத்துவதற்கு அவைத் தலைவர் விடுத்த தொடர் கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கங்களுக்கு இடையே இரண்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்திய புள்ளியியல் நிறுவன மசோதாவை ஒன்றிய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் அறிமுகம் செய்ய அனுமதி கோரினார். மசோதாக்களை எதிர்ப்பதாக அறிவிப்பு அளித்தவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டும் யாரும் பேசவில்லை என்பதை அவைத் தலைவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் பேசாததால் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வங்கி அமைப்பின் டிஜிட்டல் சார்ந்த செயல்பாடுகளுக்கு ஏற்ப நீதிமன்றங்களில் டிஜிட்டல் மற்றும் மெய்நிகர் பதிவுகளை ஏற்புடைய சாட்சியங்களாக சேர்க்கும் நோக்கத்துடன் பிரிட்டிஷ் காலத்து சட்டத்திற்கு மாற்றாக வங்கிப் பதிவேடுகள் சாட்சியகச் சட்டம் 2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார்.

இதனிடையே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டபடி இருந்தனர். இதனால் கூச்சல் குழப்பம் நீடித்ததால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் அவை தொடங்கிய பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திருத்த மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே மாநிலங்களவையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக போராடிய மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருடப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசுவதற்கு முற்பட்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதலில் முழக்கங்களை நிறுத்திவிட்டு தங்கள் இருக்கைக்கு திரும்ப வேண்டும் என்று அவைத் தலைவர் வலியுறுத்தினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இருக்கைக்கு திரும்பாமல் அவ்வப்போது முழக்கங்களை எழுப்பியதால் அவை இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அவை பிற்பகல் மீண்டும் தொடங்கியபோது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிலுவைத்தொகையை விரைவாகப் பெறுதல், தகராறுகளுக்கு விரைவான தீர்வு காணுதல் மற்றும் பணப்புழக்க சிக்கல்களை தீர்த்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா 2026 நிறைவேற்றப்பட்டது. மசோதா மீதான விவாதத்தின்போதும், பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் அது நிறைவேற்றப்பட்டபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டபடி இருந்தனர்.இதனையடுத்து தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

* நன்கொடைப் பெட்டியை வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

நாடாளுமன்றத்தின் மகர துவார் வாயிலுக்கு முன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி எம்பி டிம்பிள் யாதவ், திரிணாமுல் காங்கிரசின் மஹூவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமர் கோயில் நன்கொடை திருட்டை அடையாளப்படுத்தும் வகையில் எம்பிக்கள் நன்கொடைப் பெட்டிகளை வைத்து அதை சுற்றி நின்று அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். சிலர் நன்கொடைகளையும் அதில் நடந்த திருட்டையும் குறிக்கும் வகையில் பணத்தை போட்டனர். நன்கொடை திருடர்களே, பதவித்திருடர்களே என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். அமித் ஷா ஏன் நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்ற பெரிய பதாாகைக்கு பின் அனைவரும் அணிவகுத்து நின்றனர்.

* உச்சநீதிமன்ற நீதிபதிகளை அதிகரிக்கும் திருத்த மசோதா

இந்தியத் தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34ல் இருந்து 38ஆக உயர்த்தி அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து மக்களவையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார். பின்னர் சட்டரீதியான தீர்மானம் குறித்துப் பேசுமாறு அவைத் தலைவர் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டுக்கொண்டு இருந்ததால் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டு விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

* உணவு வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.5.13கோடி அபராதம்

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி சந்திரகாந்த் ஹண்டோர், கடந்த மூன்று ஆண்டுகளில் உயர்தர மற்றும் விரைவு ரயில்களில் வழங்கப்படும் தரமற்ற உணவு, சுகாதாரமற்ற சமையலறைப் பெட்டிகள் மற்றும் சேவை குறைபாடுகள் தொடர்பாக மாநில வாரியாகவும், மண்டல வாரியாகவும் எத்தனை புகார்கள் பெறப்பட்டன என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துமூலமாக அளித்த பதிலில், ‘‘கடந்த மூன்று ஆண்டுகளில் ரயில்களில் தரமற்ற உணவு, சுகாதாரமற்ற சமையலறைப் பெட்டிகள் குறித்த பல புகார்கள் மீதான விசாரணைக்கு பின் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.5.13கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

 

Tags : Parliament ,New Delhi ,NEET ,Ram ,Temple ,
× RELATED எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தால்...