அண்ணாநகர்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (23). இவர் சென்னை அண்ணாநகரில் ஒரு வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கணக்காளராக வேலைபார்த்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் வழக்கம் போல் வேலைக்கு வந்த ஆகாஷ், அக்கட்டிடத்தின் 4வது மாடியிலிருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆகாஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அண்ணாநகர் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கையாடல் நடந்ததாகவும், இதுதொடர்பாக கணக்காளராக பணிபுரியும் ஆகாஷை டிராவல்ஸ் நிறுவனத்தினர் சரமாரி தாக்கி, அவரை பணம் கையாடல் செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதில் வலி தாங்க முடியாத ஆகாஷ், அங்கிருந்து தப்பி செல்வதற்காக, அக்கட்டிடத்தின் 4வது மாடியிலிருந்து கீழே குதித்ததாக போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை ஆகாஷ் தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதைத் தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டுதல் உள்பட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராவல்ஸ் நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
