சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பசுமையான நிலப்பரப்பை பார்த்து உற்சாகமான நீலமான், வெளிமான்

*அரசு உத்தரவு கிடைத்ததும் மக்கள் பார்வைக்கு அனுமதி

சேலம் : சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு, பன்னர்கட்டாவில் இருந்து கொண்டு வரப்பட்ட நீலமான், வெளிமான்கள், பசுமையான நிலப்பரப்பை பார்த்து உற்சாகமாக உள்ளன. அரசு அனுமதி கிடைத்ததும், மக்கள் பார்வைக்கு அனுமதிக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது.

இங்கு, புள்ளிமான், கடமான், முதலை, மலைப்பாம்பு, வண்ண மயில்கள், வெள்ளை மயில் உள்ளிட்ட 300க்கும் அதிகமான வன உயிரினங்களை பராமரித்து வருகின்றனர். இப்பூங்காவிற்கு சேலம் மட்டுமின்றி சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து, இயற்கை அழகையும், விலங்குகளையும் பார்த்து ரசிக்கின்றனர்.

இந்த குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு பிற பூங்காக்களில் இருந்து கூடுதல் விலங்குகளை கொண்டு வந்து வைத்து பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, கடந்த 4 நாட்களுக்கு முன் கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து 4 நீலமான் (2 ஆண், 2 பெண்), 4 வெளிமான் (ஒரு ஆண், 3 பெண்), 2 பொன்னிற குள்ளநரி (ஒரு ஆண், ஒரு பெண்) கொண்டு வரப்பட்டது. இந்த 10 விலங்குகளையும் அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கூண்டுகளில் அடைத்தனர்.

தற்போது பூங்காவில் புள்ளிமான்கள் இருக்கும் கூண்டின் வடக்கில் 4 வெளிமான்களுக்கு திறந்தவெளி கூண்டு அமைக்கப்பட்டு, அங்கு விட்டுள்ளனர். இதேபோல், பூங்காவிற்குள் உள்ள விலங்குகளுக்கான மருத்துவமனை அருகே நீலமான்களுக்கான திறந்தவெளி கூண்டு அமைக்கப்பட்டு, அங்கு அதனை விட்டுள்ளனர்.

2 பொன்னிற நரிகளும் ஏற்கனவே இருக்கும் நரிக்கூண்டு பகுதியில் வைத்துள்ளனர். இந்த 10 விலங்குகளும் புதிய வசிப்பிடத்தை ஏற்றுக்கொண்டு, உற்சாகமாக வாழ்வதை உறுதி செய்ய 24 மணி நேரமும் மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனால், தற்போது வரை மக்கள் பார்வைக்கு அனுமதிக்கவில்லை.

நீலமான்களும், வெளிமான்களும் புதிய வசிப்பிடமான குரும்பப்பட்டி பூங்காவின் பசுமையான நிலப்பரப்பை பார்த்து உற்சாகமாகியுள்ளன. காரணம், பன்னர்கட்டா பூங்காவில் அவை இத்தகைய பசுமையான பகுதியை பார்த்திருக்கவில்லை.

இதனால், வனத்துறையினர் வழங்கும் தீவனத்தட்டு, கோதுமை தவுடு, மாட்டுத்தீவனம், முட்டைக்கோஸ், கீரைகளோடு தரையில் வளர்ந்துள்ள பசுமையான புற்களையும் சாப்பிடுகின்றன. இந்த மான்கள், பசுமை நிலப்பரப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில், அங்குமிங்கு துள்ளிக்குதித்து வருகின்றது.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், `குரும்பப்பட்டி பூங்காவிற்கு புதிதாக வந்த நீலமான்களும், வெளிமான்களும் நல்ல நிலையில் உள்ளன. புதிய இடத்தை ஏற்று வாழ பழகி வருகிறது. சுற்றுலா பயணிகள் பார்வைக்கு மிக விரைவில் அனுமதிக்க இருக்கிறோம். இதற்காக தமிழ்நாடு அரசிடம் அனுமதியை பெற்று, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

Related Stories: