*படகு, பரிசல் சவாரி செய்து உற்சாகம்
சேலம் : வார விடுமுறையை கொண்டாடுவதற்காக, ஒகேனக்கல் மற்றும் ஏற்காட்டில் குடும்பத்தினருடன் குவிந்த சுற்றுலா பயணிகள், படகு மற்றும் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், வார விடுமுறை நாளான நேற்று, பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளே குடும்பத்தினருடன் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் அருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர், குடும்பத்துடன் காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து குடும்பத்தினர், நண்பர்களுடன் லைப் ஜாக்கெட் அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசல் சவாரி சென்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால், அங்குள்ள ஓட்டல்கள், மீன்கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் வியாபாரம் களை கட்டியது.
ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள லேடீஸ் சீட், ஜெண்ட்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், தாவரவியல் பூங்கா, அண்ணா பூங்கா மற்றும் ஏரிப்பூங்கா, சேர்வராயன் மலைக்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு களித்தனர்.
பின்னர், குடும்பத்தினருடன் ஏற்காடு நகரின் மையப்பகுதியில் உள்ள ஏரியில் குதூகலமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால், ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன. மேலும், ஓட்டல்கள், நடைபாதை கடைகளில் வியாபாரம் களை கட்டியது. சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வாகனங்களில் வந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர்.
மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூருக்கும் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் ெசய்யப்பட்டிருந்தன.
சுற்றுலா பயணிகள் வருகையை எதிர்நோக்கி, ஏராளமான கடைகள் போடப்பட்டுள்ளன. நேற்று மேட்டூருக்கு வந்த மக்கள், குடும்பத்தினருடன் அணை கால்வாயில் குளித்தனர். பின்னர், அணையின் காவல் தெய்வமான முனியப்பன் கோயிலில் வழிபட்டனர். அதனை தொடர்ந்து, அணை பூங்காவில் குழந்தைகளுடன் குதூகலமாக விளையாடி மகிழ்ந்தனர்.
பூலாம்பட்டி: சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகேயுள்ள பூலாம்பட்டிக்கு நேற்று வந்த சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் காவிரி ஆற்றில் விசைப்படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர், அங்குள்ள உணவகங்களில் மீன் உணவுகளை சுவைத்து மகிழ்ந்தனர். பின்னர், மாட்டுக்கார பெருமாள் கோயில், ஓணாம்பாறை, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பொழுதை போக்கி மகிழ்ந்தனர்.
