சென்னை, ஆக.3: 2026ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருது வழங்குவதாகவும், சினிமா வாய்ப்பு தருவதாகவும் பிரபல நடிகைக்கு ஆசைவார்த்தை கூறி, அவருடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து, மிரட்டி ரூ.2 லட்சம் பணம் மற்றும் 91 கிராம் நகைகளை பறித்த தனியார் விருது வழங்கும் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சினிமா மற்றும் சின்னத்திரை நடிகை ஒருவர் காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். புகாரில் நடிகை கூறியதாவது: சென்னை வடபழனியில் உள்ள பிரபல சினிமா தயாரிப்பு நிறுவன வளாகத்தில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் அதிகாரியான ஷேக் முத்தலீப் (46) என்பவர் கடந்த ஆண்டு என்னை நேரில் சந்தித்தார்.
அப்போது எங்கள் நிறுவனம் சார்பில் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களை தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு ‘சிறந்த நடிகைக்கான விருது’ வழங்குவது வழக்கம். அதன்படி உங்களை வரும் 2026ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதுக்கு எங்கள் நிறுவனம் தேர்வு செய்துள்ளது என்று கூறினார். இதை தொடர்ந்து ஷேக் முத்தலீப் மற்றும் அவரது நிறுவன மேலாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் என்னுடன் நட்பாக பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் புதிய படம் எடுக்கப்பட உள்ளது. அந்த படத்தில் எனக்கு வாய்ப்பு தருவதாக ஆசைவார்த்தை கூறினர். அதை நம்பிய என்னை, மேல்மருவத்தூர் அருகே அழைத்து வந்து மாடலிங் புகைப்படம் எடுக்க அழைத்து சென்று, என்னுடன் ஷேக் முத்தலீப் மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகியோர் நெருக்கமாக இருந்தனர். இதுபோல் பலமுறை என்னை அழைத்து இருவரும் உல்லாசமாக இருந்தனர்.
ஒரு கட்டத்தில் நான், சிறந்த நடிகைக்கான விருது எப்போது எனக்கு வழங்கப்படும் என்று கேட்டேன. அதற்கு இருவரும் வழங்கும்போது உங்களை அழைப்போம் என்று கூறினர். அதேநேரம் சினிமா வாய்ப்பு குறித்து கேட்டபோது, முறையாக பதில் இல்லை. பிறகு ஷேக் முத்தலீப் மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகியோர் இனி எங்களை தொந்தரவு செய்தால், எங்களுடன் நீ நெருக்கமாக இருந்ததை நாங்கள் ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளோம். அதை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என்று மிரட்டினர்.இதனை சற்றும் எதிர்பார்க்காத நான், அந்த வீடியோவை கேட்டபோது, அவர்கள் எனக்கு ஒரு வீடியோ மட்டும் அனுப்பி அடிக்கடி பணம் கேட்டு மிரட்டினர். வேறு வழியின்றி ரூ.2 லட்சம் பணம் கொடுத்தேன். அதுவும் போதாது என்று கூறி மேலும் பணம் கேட்டு மிரட்டினர். அதோடு இல்லாமல் நாங்கள் எப்போது அழைத்தாலும் எங்களுடன் நீ நெருக்கமாக இருந்துவிட்டு செல்ல வேண்டும் என்று மிரட்டினர்.
அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. உடனே நிர்வாண வீடியோ அனுப்பி மிரட்டினர். தன்னிடம் பணம் இல்லை என்றும் கூறியும், அவர்கள் பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை உன்னிடம் உள்ள நகைகளை கொடு என்று கூறினர். அதன்படி என்னிடம் வீடியோ காட்டி மிரட்டி 91 கிராம் தங்க நகைகளை ஷேக் முத்தலீப் மற்றும் சுரேஷ்கண்ணன் ஆகியோர் பறித்துவிட்டனர்.எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் உள்ள எனது நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படங்களை மீட்டு அழிக்க வேண்டும். மேலும், ரூ.2 லட்சம் பணம் 91 கிராம் தங்க நகைகளை மீட்டு தர வேண்டும் என்று கூறியுள்ளார். நடிகையின் புகார் மீது மேல்மருத்துவத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியபோது, நடிகையின் புகாரில் கூறிய ஷேக் முத்தலீப் மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகியோர் அனுப்பிய வீடியோக்களை ஆய்வு செய்தபோது, நடிகையுடன் வடபழனியில் உள்ள ஓட்டல் ஒன்றில் எடுக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், மேல்மருவத்தூரில் நடிகையும் அதன் பிறகு தான் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.
எனவே காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி உத்தரவுப்படி மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீசார் இந்த வழக்கை சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து வடபழனி அனைத்து மகளிர் போலீசார் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவன வளாகத்தில் உள்ள தனியார் நிறுவன அதிகாரிகளான ஷேக் முத்தலீப் மற்றும் சுரேஷ் கண்ணன் ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், வீடியோ எடுத்து மிரட்டியது, ஐடி ஆக்ட் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் ஷேக் முத்தலீப்பை வடபழனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள சுரேஷ் கண்ணனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். நடிகையிடம் மிரட்டி பறித்த பணத்தை செலவு செய்துவிட்டதாகவும், நகைகளை அடகு வைத்து அந்த பணத்ைதயும் செலவு செய்ததும் தெரியவந்தது. இருந்தாலும் போலீசார் நடிகையிடம் பறித்த பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சினிமா நடிகைக்கு சிறந்த நடிகைக்கான விருது மற்றும் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
