போதிய மழை இல்லாத காரணத்தால் பூண்டி நீர்த்தேக்கம் தண்ணீரின்றி மேய்ச்சல் நிலமாக மாறிய அவலம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீரின்றி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய அவலத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் திருவள்ளூரை அடுத்த பூண்டி கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 1939 முதல் 1944ம் காலகட்டத்தில் 3458 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் சென்னை மாநகர முன்னாள் மேயர் சத்தியமூர்த்தி பெயரால் உருவாக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் மூலம் சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நீர்த்தேக்கத்தில் கூடுதலாக தண்ணீர் தேக்கி வைப்பதற்காக 2 அடி உயர்த்துவதற்காக கடந்த 1991ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணி 1997ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டு 2 அடி உயர்த்தும் பணி முடிக்கப்பட்டது. இதனால் நீர் இருப்பு 2 அடி உயர்ந்தது. இந்த நீர்த்தேக்கத்தில் 3231 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் 35 அடி உயரத்தில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கம் நிரம்பினால் அதில் இருந்து உபரிநீர் வெளியேறும் வகையில் 50 அடி உயரத்தில் 16 ஷட்டர்களும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் – ஆந்திர மாநிலங்களுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்ததின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் பெறப்பட்டு பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டு, பிறகு இணைப்பு கால்வாய் மற்றும் பேபி கால்வாய் மூலம் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு மழைக்காலங்களில் மழை நீர் குசஸ்தலை ஆற்றின் வழியாக பெறப்படும் மழை நீரும், தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின்படி 12 டிஎம்சி கிருஷ்ணா நீரும் தான் சென்னை மாநகர மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக உள்ளது.

மேலும் கொசஸ்தலை ஆற்றில் வரும் மழை நீர் மற்றும் ஆந்திர மாநிலம் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக பெறப்படும் நீர் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டு சென்னை மாநகரம் மக்களின் குடிநீரை பூர்த்தி செய்யும் வகையில் பேபி கால்வாய் மற்றும் இணைப்புக் கால்வாய்களின் வழியாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு தண்ணீா் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 23ம் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறி நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக நீா் வந்து கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இணைப்புக் கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தற்போது திருவள்ளூா் மாவட்டத்தில் குசஸ்தலை ஆற்று பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனாலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை. இதனால் கடல் போல் காட்சியளிக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில், தற்போது வெறும் 1034 மில்லியன் கன அடி தண்ணீா் மட்டுமே இருப்பு உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் போதிய நீரின்றி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளதால் கால்நடைகள் மேய்ந்து வருகின்றன என்பது குறிப்பிடதக்கது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 நீர்த்தேக்கங்களில் 5,182 மில்லியன் கன அடி நீர் இருப்பு மட்டுமே உள்ளது
பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 35 அடி மொத்த உயரத்தில் 26.31 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 1034 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 340 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கன அடி வீதமும், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி வீதமும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி மொத்த உயரத்தில் 17.78 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2,087 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 159 கன அடி வீதமும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.புழல் ஏரியின் 21.20 அடி மொத்த உயரத்தில் 12.94 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது 1703 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலையில் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 210 கன அடியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 182 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. சோழவரம் ஏரியின் 18.86 அடி மொத்த உயரத்தில் 1.44 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது 90 மில்லியன் கன அடியாகவும் தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை.

கண்ணன்கோட்டை ஏரியின் 36.61 அடி மொத்த உயரத்தில் 29.13 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 268 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 4 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் தற்போது 5,182 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் கண்டலேறுவில் திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லைக்கு 365 கன அடியாக வருகை
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில் 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.இந்நிலையில் ஜூலை முதல் அக்டோபர் வரை திறக்க வேண்டிய தண்ணீர் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறுவில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிவீதம் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் வினாடிக்கு 365 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் நேற்றுமுன்தினம் இரவு மழை பெய்ததால் கால்வாயில் சற்று கூடுதலாக தண்ணீர் வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: