மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, வேறு வழியின்றி கபினியில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை, கடந்த 2 மாதமாக வழக்கமான அளவு பெய்யவில்லை.
இதனால், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளிலும் நீர்மட்டம் குறைவாக இருந்தது. இதனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை, கர்நாடக அரசு திறக்கவில்லை. இது குறித்து தமிழக அரசு கடந்த 28ம் தேதி, காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முறையிட்டதை அடுத்து, 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்த மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி நீரை திறந்து விடுமாறு உத்தரவிட்டது. ஆனாலும், தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு தெரிவித்தது. காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில், தமிழகம்-கர்நாடகா இடையே மோதல் முற்றி வந்த நிலையில், கடந்த 31ம் தேதி முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி, கர்நாடக மாநிலம் வயநாட்டில், கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு தொடங்கி விடிய, விடிய பலத்த மழை கொட்டியதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து மளமளவென அதிகரித்தது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம், நேற்று முன்தினம் பிற்பகல் முழு கொள்ளளவை எட்டியது.
இதனால் அணை உடையாமல் இருக்கவும், மக்கள் வெள்ளத்தில் சிக்காமல் இருக்கவும் கபினி அணையில் இருந்து உபரி நீரை திறந்து விட கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த அணையில் இருந்து, நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இரவில் 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி, கபினி அணைக்கு நீர்வரத்து 23,009 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 14,958 கனஅடியாக குறைக்கப்பட்டது.
கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், 124.80 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம், 95 அடியை தாண்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து 22,055 கனஅடியாக உள்ளது. மேலும், ஹேமாவதி அணை நிரம்பிய நிலையில், அந்த அணையில் இருந்து 11,884 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
இந்த நீர் கேஆர்எஸ் அணைக்கு தான் செல்லும். ஹாரங்கி அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. கபினியில் இருந்து திறக்கப்படும் உபரிநீர், வழக்கமாக 24 மணி நேரத்திற்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேரும். ஆனால், பல மாதங்களாக காவிரி ஆறு வறண்டு கிடப்பதால், மணல் பரப்பில் அதிகமாக நீர்உறிஞ்சப்பட்டு, குண்டுகுழிகளில் நிரம்பி வர தாமதமாகும். இதனால், இன்று காலை தான் ஒகேனக்கல் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* மேட்டூர் அணை நீர்மட்டம் 73.33 அடி
ஒகேனக்கல் காவிரியில் கடந்த 7 நாட்களாக நீர்வரத்து 150 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 600 கனஅடியாக அதிகரித்தது. ஆனால், நேற்று காலை 500 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணைக்கு, நேற்று முன்தினம் 42 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 47 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1500 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 73.49 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 73.33 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 35.63 டிஎம்சியாக உள்ளது.
* பில்லூர் அணை நிரம்பியது: பவானி ஆற்றில் வெள்ளம்
கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி.தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலங்களில் பில்லூர் அணை நான்கு முறை நிரம்பியது.
ஆனால், இந்த ஆண்டில் முதன்முறையாக பில்லூர் அணை முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அடைந்தது. அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக உள்ளதால், பாதுகாப்பு கருதி நான்கு மதகுகளின் வழியாக வினாடிக்கு 2060 கன அடி நீரும், மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி நீரும் என 8060 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
