×

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை; எத்தனை வழக்குகள் போட்டாலும் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிப்போம்: செந்தில் பாலாஜி பேட்டி

 

சென்னை: அமைச்சர் சொன்னது போல் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மக்களின் அடிப்படை தேவைகளை தீர்க்காமல் வழக்குகள் போடுவதில் தவெக அரசு தீவிரமாக உள்ளது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அனைத்தும் பொய்யானவை என்பதை நிரூபிப்போம் என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜரானபின் அவர் அளித்த பேட்டியில், நான் எங்கும் தலைமறைவாக இல்லை, இங்கு தான் இருந்தேன். அமைச்சர் சொன்னது போல் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எத்தனை வழக்கு போட்டாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். நான் ஏற்கெனவே சிறையை பார்த்ததால் எதற்கும் அஞ்சவில்லை.

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட 5 நாள் விலக்கு கேட்டு கடிதம் எழுதியிருந்தேன். வழக்கு குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க இருந்ததால் அவகாசம் கேட்டிருந்தேன். தவெக அரசு அமைந்தது முதல் பல்வேறு பிரச்னைகளை மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் கைது நடவடிக்கையில் தவெக அரசு ஈடுபடுகிறது.

கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்காமல் திசை திருப்பும் வேலையில் நிர்மல் குமார் ஈடுபடுகிறார். ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அதன்படி இருவரும் கடந்த 25-ஆம் தேதி முதல் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags : Senthil Balaji ,Chennai ,Former Minister ,minister ,Government of Dweka ,
× RELATED தமிழக விவசாயிகளை நாக்பூரில் கைது...